காரை ஏற்றினாரா சல்லு? மீண்டும் பரபரப்பு! : மாடல் அழகியால் தப்பினார்
ஏற்கனவே, காரை ஏற்றி நான்கு பேருக்கு காயம் ஏற்படுத்திய வழக்கில் சிக்கித்தவிக்கும் பாலிவுட் நடிகர் சல்மான் கான், கடந்த திங்கட் கிழமை, மீண்டும் ஒரு பரபரப்பில் சிக்கினார். ஆனால், இந்த முறை அவர் கார் , விபத்தை ஏற்படுத்தவில்லை; அவர் தான், காயமடைந்த மாடல் அழகிக்கு உதவினார். தெற்கு மும்பை, வொர்லி சந்திப்பில் திங்கள் கிழமை மாலை திடீர் பரபரப்பு. “ஒரு மாடல் அழகி கார் மீது சல்மான் கார் மோதி விட்டது; மாடல் அழகி காயமடைந்தார்’ என்று பரபரப்பு ஏற்பட்டு, போலீசும், பொதுமக்களும் சூழ்ந்துவிட்டனர். இந்த விபத்தில், காரை ஓட்டி வந்த சஞ்சய் சூர்யவன்ஷி என்ற மாடல் அழகி, கைவிரல்கள் உடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த மாடல் அழகி சூர்யவன்ஷி, கனடா நாட்டு தயாரிப்பான “ப்ரூக் லிண்ட்ஸ்லே கிளார்க்’ காரை ஓட்டி வந்தார்.அவருடன் ஒரு நண்பரும் அமர்ந்திருந்தார். அந்த காரை தான் சல்மான் ஓட்டி வந்தார் என்று போலீசார், முதலில் நினைத்தனர். ஆனால், சல்மான் அந்த காரில் வரவே இல்லை. அவர் கார், பின்னால் வந்து நின்றது. அந்த காரில் இருந்து இறங்கிய சல்மான், விபத்துக்குள்ளான தன் தோழி சஞ்சய் சூர்யவன்ஷியை மருத்துவமனையில் அனுமதிக்க ஏற்பாடு செய்துள்ளார் என்பது தான் உண்மை என்று போலீசுக்கு பின்னர் தெரியவந்தது.
இதுகுறித்து, போலீசார் கூறுகையில்,” நடிகர் சல்மான் சம்பந்தப்பட்ட விபத்து என்று தவறாக பரபரப்பான தகவல் பரவவே கூட்டம் அதிகமானது. கூட்டம் அதிகமாக வருவதால், சல்மானை அந்த இடத்தில் இருந்து சென்று விடும் படி நாங்கள் கேட்டுக்கொண்டோம். சர்வதேச டிரைவிங் லைசன்ஸ் வைத்துள்ள மாடல் அழகி தான் விபத்துக்கு காரணம். அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது’ என்றனர்.
சல்மான், கடந்த 2002 ம் ஆண்டு, தன் டயோட்டா லேண்ட் க் ரூய்சர் காரில் சென்று கொண்டிருந்த போது, பந்த்ரா பகுதியில் நடைபாதையில் சென்று கொண்டிருந்த நான்கு பேர் மீது மோதி, காயமடையச்செய்தது. இந்த வழக்கு விசாரணையில், சல்மான் டிரைவர், “என் காரில் குடிபோதையில் சல்மான் உட்கார்ந்திருந்தார்’ என்று கூறி விட்டு, கடந்த மாதம், காசநோயில் இறந்துவிட்டார்.
ஏற்கனவே, மான் வேட்டை வழக்குகளில் சிக்கி தவியாய் தவிக்கும் சல்மான் கானுக்கு, இந்த வழக்கு தொடர்ந்து தலைவலியாக இருக்கிறது.