ஐ.நா அலுவலகம் முன் காணாமல் போனவர்களின் உறவினர்கள் ஆர்ப்பாட்டம்..!!
யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் கிளை அலுவலகத்திற்கு எதிரில் இன்று (வியாழக்கிழமை) அமைதியான முறையில் ஆர்ப்பாட்டமொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பத்து நாள் விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கைக்கு வந்துள்ள, சட்டவிரோத கடத்தல்கள் மற்றும் காணாமல் போதல்கள் தொடர்பிலான ஐக்கிய நாடுகள் அமைப்பின் விசேட பிரதிநிதிகள் இன்று (வியாழக்கிழமை) யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்துள்ளனர்.
இந்நிலையில், வடகிழக்கு ஒருங்கிணைப்பு குழு, காணாமல் போனோர் சார்பாக இந்த அமைதியான ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தது.
இந்நிலையில், காணாமல் போனவர்களின் உறவுகள் கறுப்புத் துணியால் தமது வாய்களைக் கட்டிக்கொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன்போது, காணாமல் போன மற்றும் கடத்தப்பட்ட தமது உறவுகளை கண்டுபிடித்து தரும்படியும், விசாரணைகள் துரிதமாக நடைபெறுவதுடன், அது மிகவும் நம்பிக்கையானதாக இருக்க வேண்டும் என்றும் காணாமல் போனோரின் உறவுகள் கேட்டுக் கொண்டனர்.
அத்துடன், காணாமல் போன தமது உறவுகளின் புகைப்படங்களைத் தாங்கிய அவர்கள், தமது உறவுகளை கண்டுபிடித்து தரும்படி கண்ணீர் மல்கக் கேட்டுக் கொண்டனர்.
Average Rating