ஜனாதிபதி , விக்னேஸ்வரன் சந்திப்பு: தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பில் வழங்கிய தகவல்..!!
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் கட்டம் கட்டமாக நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி வட மாகாண முதலமைச்சரிடம் உறுதியளித்துள்ளார்.
முதலமைச்சர் சீ.வி விக்னேஸ்வரன் தலைமையிலான மாகாண அமைச்சர்கள் குழு இன்று ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை கொழும்பில் வைத்து சந்தித்தது.
இந்த சந்திப்பு முற்பகல் 11 இல் இருந்து பகல் 12.45 வரை நீடித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது, ஏனைய மாகாணங்களை விட போரினால் பாதிக்கப்பட்ட மாகாணம் என்ற வகையில் வட மாகாணத்தின் அதிக தேவைகள் குறித்து விக்னேஸ்வரன் தலைமையிலான குழுவினர் ஜனாதிபதியிடம் விளக்கமளித்தனர்.
அத்துடன் முக்கியமாக தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் விக்னேஸ்வரன் தலைமையில் ஜனாதிபதியை சந்தித்த தமது குழுவினர் வலியுறுத்தலை விடுத்ததாக மாகாண அமைச்சர் பி.டெனீஸ்வரன் எமது செய்தி சேவைக்கு தெரிவித்தார்;.
தமிழ் அரசியல் கைதிகளை விடுவிப்பதில் தமக்கு எந்தவித ஆட்சேபனைகளும் இல்லை.
எனினும், அனைவரையும் ஒரே தடவையில் விடுவிப்பது என்பது தென்னிலங்கையை பொறுத்தவரையில் தமக்கு அரசியல் ரீதியான பிரச்சினையை ஏற்படுத்தும்.
எனவே, கட்டம் கட்டமாக குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் அரசியல் கைதிகளை விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
இதன் ஒரு கட்டமாக எதிர்வரும் திங்கட் கிழமை சட்டமா அதிபர் திணைக்களத்தின் அதிகாரிகளை 263 அரசியல் கைதிகள் தொடர்பிலான கோவைகளுடன் சமுகம் தருமாறு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளதாகவும் வட மாகாண அமைச்சர் டெனீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
Average Rating