மீண்டும் மம்பட்டியான்!
தமிழ் ரசிகப் பெருமக்கள் அத்தனை சுலபத்தில் மறக்க முடியாத படங்களில் ஒன்று மலையூர் மம்பட்டியான். இருபது வருடங்களுக்கு முன்பு தியாகராஜன் என்ற சாதாரண நடிகர், மிகப்பெரிய ஆக்ஷன் ஹீரோவாக வலம் வர முக்கிய காரணமாக இருந்தது அந்தப் படம். அதேபோல சரிதா, கவுண்டமணிக்கும் செந்திலுக்கும் கூட இந்தப் படம் மிகப் பெரிய திருப்பு முனையாக அமைந்தது. மறைந்த ராஜசேகர் இயக்கத்தில் உருவான இந்தப் படம் பெற்ற வெற்றியைப் பார்த்து அதே பாணியில் கொம்பேறி மூக்கன், கரிமேடு கருவாயன் என்று லோக்கல் கிராமத்து தாதாக்களின் கதைகள் தடாலடியாக எடுக்க ஆரம்பித்தார்கள் எண்பதுகளின் இறுதியில். இந் நிலையில் மம்பட்டியானை மீண்டும் தயாரிக்கிறார் தியாகராஜன். நேற்று வந்த சின்னப் பசங்களெல்லாம் ரீமேக், ரீமிக்ஸ்ன்னு காசு பார்க்க ஆரம்பிச்சிட்டாங்களே, நம்ம வாரிசு மட்டும் இளப்பமா என்று யோசித்த தியாகராஜன் தனக்கு ஒரு முகவரியைத் தந்த அதே மலையூர் மம்பட்டியான் படத்தை மகன் பிரசாந்தை வைத்து ரீமேக் பண்ணும் முடிவுக்கு வந்துவிட்டாராம்.
திருமண வாழ்க்கையில் தோல்வி, அரை டஜனுக்கும் மேற்பட்ட படங்கள் பாதியில் நிற்பது, புதுப் படங்களில் நடிக்க யாரும் அழைக்காதது என விரக்தியில் உள்ள மகனின் கேரியரில் புதிய திருப்பத்தை உண்டாக்கவே இந்த முடிவுக்கு வந்திருக்கிறாராம் தியாகராஜன்.
மம்ட்டியான் படத்தின் கதையை இப்போதைய ட்ரெண்டுக்கு தகுந்த மாதிரி மாற்றி சொந்தமாக தயாரித்து இயக்கப் போகிறவர் வேறு யாருமல்ல… தியாகராஜனே தான்.
இதுகுறித்து தியாகராஜனிடம் கேட்டபோது, மம்பட்டியான் படத்தை ரீமேக் செய்யும் எண்ணம் உள்ளது. ஆனால் எப்போது என்பதை இன்னும் முடிவு செய்யவில்லை. விரைவில் அதுகுறித்து அறிவிப்பு வரும்.
மேலும் பிரசாந்த் இப்போது நடித்துக் கொண்டிருக்கும் படங்கள் ஒவ்வொன்றாக வெளிவரும் நிலையில் உள்ளன. திரைத்துறையில் வெற்றி தோல்விகள் சகஜம். பிரசாந்த் மீண்டும் பரபரப்பான நாயகனாக வருவார் என்றார்.
ஜெயமாலினி வேஷத்துல யாரு நடிப்பாகலோ?.. நமீதாவா இருக்குமோ!