அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடி செய்த அரசு ஊழியர் கைது
அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடி செய்த அரசு ஊழியர் கைது செய்யப்பட்டார். திண்டுக்கல் பாலகிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்தவர் மாசிலாமணி. இவர் தனது மகளுக்கு அரசு வேலைக்காக முயற்சி செய்து வந்துள்ளார். இதை திண்டுக்கல் ஒன்றிய அலுவலகத்தில் உதவியாளராக வேலை பார்க்கும் காளிமுத்து என்பவர் அறிந்து, தான் வேலை வாங்கித் தருவதாக சொல்லி ரூ.2 லட்சம் பணத்தை வாங்கியுள்ளார். பணம் பெற்று பல மாதங்கள் ஆகியும் வேலை வாங்கித் தராமல் இழுத்தடித்துள்ளார் காளிமுத்து. இதனால் மாசிலாமணி தான் கொடுத்த பணத்தை திருப்பி கேட்டுள்ளார். மாசிலாமணி பணத்தை கேட்டதிலிருந்து அவரை பார்ப்பதை தவிர்த்து வந்துள்ளார் காளிமுத்து. பின்னர் கடந்த சில மாதங்களாக வேலைக்கு வராமல் காளிமுத்து விடுப்பில் இருந்துள்ளார். தனது மகளுக்கு வேலையும் கிடைக்காமல், காளிமுத்துவிடம் கொடுத்த பணமும் கிடைக்காததால் மாசிலாமணி திண்டுக்கல் மாவட்ட குற்றப் பிரிவு போலீசாரிடம் புகார் அளித்தார். இந்த புகாரை தொடர்ந்து காளிமுத்துவை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்தார். மாஜிஸ்திரேட் ராதாகிருஷ்ணன் காளிமுத்துவை 15 நாள் காவலில் வைக்க உத்தரவிட்டார்.