தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் (TRO) சொத்துக்களை உலக நாடுகள் முடக்கவேண்டும்! -வெளிவிவகார அமைச்சர் கோரிக்கை
அமெரிக்க அரசாங்கத்தை முன்னுதாரணமாகக் கொண்டு உலகின் ஏனைய நாடுகளும் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் சொத்துக்களை முடக்கவேண்டும் என வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த போபொல்லாகம் சர்வதேச நாடுகளிடம வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக அமைச்சர் மேலும் தெரிவிக்கையில், உலகம் முழுவதிலும் நிதி திரட்டி எல்.ரீ.ரீ.ஈ.யினருக்கு ஆயுதம் விநியோகிக்கும் நடவடிக்கையை மேற்கொண்டு வந்தமை நிருபிக்கப்பட்டதையடுத்து தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் சொத்துக்களை அமெரிக்க அரசாங்கம் முடக்கியது. அத்துடன் வேறு ஒரு பெயரிலோ அல்லது புதிதாகவோ மீண்டும் இயங்க முடியாதபடி இந்த அமைப்புக்கு தடையும் விதித்துள்ளது. எனவே உலக நாடுகள், முக்கியமாக அவுஸ்திரேலியா, கனடா, டென்மார்க, பிரான்ஸ் மற்றும் பிரிட்டன் போன்ற நாடுகள் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் சொத்துக்களை முடக்க வேண்டும். இக்கழகத்தின் 2006 ஆம் ஆண்டின் நிதி பரிமாற்றங்கள் தொடர்பாக இலங்கை மத்திய வங்கி புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை நடத்தி அறிக்கை சமாப்பித்த பின்னர் இலங்கையின் பயங்கரவாத தடுப்புச்சட்டத்தின் கீழ் இந்த அமைப்பின் வங்கிக் கணக்குகளை இலங்கை அரசாங்கம் முடக்கியது. எனவே, தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் செயற்பாடுகளை கவனித்து அமெரிக்காவைப் பின்பற்றி உரிய நடவடிக்கை எடுக்குமாறு நான் உலக நாடுகளிடம் வேண்டுகோள் விடுக்கிறேன் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.