6 இடங்களில் சுவர் இடிந்தது: நூற்றுக்கணக்கான மரங்கள் சரிந்தன…!!
சென்னையில் பெய்து வரும் மழை காரணமாக நகரில் பல்வேறு வகையான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது.
கொருக்குப்பேட்டையில் உள்ள இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் நிறுவனத்தின் வடக்கு பகுதி சுற்றுச்சுவர் (15 அடி உயரம் கொண்டது) இன்று காலை பலத்த மழை காரணமாக இடிந்து விழுந்தது. அந்த சுவரின் 40 அடி நீளப்பகுதி அப்படியே பெயர்ந்து விழுந்தது.
அந்த சுவரை அகற்றும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். இந்த சுற்று சுவர் உள் பக்கமாக இடிந்து விழுந்ததால் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.
சைதாப்பேட்டை சுடுகாட்டை சுற்றி 11 அடி உயரத்துக்கு சுவர் கட்டப்பட்டிருந்தது. அந்த சுவர் இன்று காலை இடிந்து விழுந்தது.
இதில் அந்த பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 2 மினி வேன்கள் சேதம் அடைந்தன. அதுபோல அம்பத்தூர் ராஜீவ்காந்தி நகரில் ஒரு தனியார் நிறுவனத்தின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது.
இதில் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு கார் மற்றும் இரு சக்கர வாகனம் சேதம் அடைந்தது.
ஆவடியில் முபாரக் பகுதிக்கு பின்புறம் உள்ள சுடுகாடு சுவரும் இன்று காலை இடிந்து விழுந்தது. இதில் முருகேசன் என்பவரின் வீடு சுவர் சேதம் அடைந்தது.
ஏழு கிணறு சமயபுரத்தம்மன் கோவில் தெருவில் வசிக்கும் பத்மா என்வரின் வீட்டு சுவரும் இன்று காலை இடிந்து விழுந்தது.
அயனாவரம் வசந்தா கார்டன் இரண்டாவது தெருவில் உள்ள ஒரு வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது. இதில் 2 கார்கள் சேதம் அடைந்தன.
சென்னையில் பெய்து வரும் பலத்த மழைக்கு சென்னையில் பல இடங்களில் மரங்கள் வேரோடு சாயந்தன. ஸ்டான்லி மருத்துவமனை நுழைவாயில் அருகே அசோகா மரம் வேரோடு சாய்ந்தது.
கிண்டி கவர்னர் மாளிகை வளாகத்தில் உள்ள ஒரு நாட்கள் மரம் திடீரென பயங்கர சத்தத்துடன் சரிந்து விழுந்தது. இதில் விருந்தினர் மாளிகையில் சேதம் ஏற்பட்டது.
அபிராமபுரம் டாக்டர் ரெங்கா சாலை, எழும்பூர் ஹால்ஸ் சாலை ஆகிய இடங்களிலும் மரங்கள் வேரோடு சாய்ந்தன. பெரவள்ளூர் பெரியார் நகர் கார்த்திகேயன் சாலையிலும் மரங்கள் வேரோடு சாய்ந்தன.
இதனால் இந்த பகுதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சென்னையில் தொடர் மழை காரணமாக நூற்றுக்கணக்கான மரங்கள் வேரோடு சரிந்து விழுந்ததால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டது.
மாநகராட்சி ஊழியர்கள் உடனுக்குடன் மரங்களை வெட்டி அகற்றினார்கள். சென்னையில் மழை நீடிக்கும் என்பதால் சுவர் ஓரங்களிலும், மரங்களின் அடியிலும் மக்கள் தஞ்சம் புகுவதை தவிர்க்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
Average Rating