தஞ்சையில் நகை கடையில் கொள்ளை..!!
தஞ்சையில் நகை கடையில் 2½ லட்சம் மதிப்புள்ள வெள்ளி பொருட்கள் கொள்ளை போனது.
தஞ்சை காந்திஜி சாலையில் உள்ள ஒரு நகைக்கடையில் நேற்று இரவு வியாபாரம் முடிந்து ஊழியர்கள் கடையை பூட்டி சென்றனர்.
இதனை நோட்டமிட்ட கொள்ளை கும்பல் நள்ளிரவு கடையின் மேல் பகுதியில் உள்ள ஆஸ்பெஸ்டாஸ் கூரையை உடைத்து உள்ளே புகுந்தனர்.
பின்னர் அங்கிருந்த கதவை உடைத்தனர். இதனை தொடர்ந்து கியாஸ் சிலிண்டரால் லாக்கரை உடைத்தனர். ஆனால் உடைக்க முடியவில்லை. இதனால் வெளியில் வைக்கப்பட்டு இருந்த வெள்ளி பொருட்களை கொள்ளையடித்து விட்டு தப்பி சென்று விட்டனர். சுமார் 2½ லட்சம் மதிப்புள்ள 6 கிலோ வெள்ளி கொள்ளையடிக்கப்பட்டது.
லாக்கரை உடைக்க முடியாததால் அதில் வைக்கப்பட்டு இருந்த லட்சக்கணக்கான மதிப்புள்ள நகைகள் தப்பியது.
இது குறித்து கடை உரிமையாளர் தஞ்சை நகர மேற்கு போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் தஞ்சை நகர துணை போலீஸ் சூப்பிரண்டு தமிழ் செல்வன், இன்ஸ்பெக்டர் ராஜகோபால் மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்.
போலீஸ் மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. அது கடையின் பின்புறம் சிறிது தூரம் ஓடி நின்று விட்டது. எனவே கொள்ளையர்கள் கடையின் பின்பக்கம் வழியாக வந்து இருக்கலாம் என தெரிகிறது.
கைரேகை நிபுணர்களும் வந்து தடயங்களை சேகரித்தனர். இக்கடையில் ஏற்கனவே 3 முறை திருட்டு நடைபெற்றுள்ளது. தற்போது 4–வது முறையாக கொள்ளை நடைபெற்று இருப்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு இக்கடையில் தீ விபத்து ஏற்பட்டது. எப்போதும் பரபரப்பாக காணப்படும் காந்திஜி சாலையில் நகை கடையில் கொள்ளை நடைபெற்று இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தஞ்சை மாவட்ட வணிகர் சங்க பேரவை தலைவர் கணேசன், செயலாளர் முருகேசன், துணை தலைவர் ரமேஷ், ஆலோசகர் சுந்தர மூர்த்தி ஆகியோர் கொள்ளை நடைபெற்ற நகை கடையை பார்வையிட்டனர்.
Average Rating