கல்லூரி தேர்வில் பெயில் ஆனதால் தற்கொலை செய்த மாணவர் வகுப்பிலேயே அதிக மதிப்பெண்ணுடன் தேர்ச்சி…!!
ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தில் உள்ள ஸ்ரீநகரில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் மின்னணு பிரிவில் என்ஜினீயராக படித்துவந்த முஹம்மது அட்னான் ஹிலால்(17) என்ற மாணவர், கடந்த ஜூன் மாதம் தனது முதல் செமஸ்டர் தேர்வை எழுதினார்.
இம்மாநிலத்தில், குறைந்தபட்சம் 33 சதவீதம் மதிப்பெண்களை பெற்றால் மட்டுமே தேர்ச்சியடைய முடியும் என்ற நிலையில் இந்த தேர்வின் முடிவுகளை இண்டர்நெட்டில் பார்த்த ஹிலால் அதிர்ச்சி அடைந்தார். இயற்பியல் பாடத்தில் வெறும் 28 மதிப்பெண்கள் மட்டுமே பெற்றிருந்ததை எண்ணி வேதனையில் ஆழ்ந்தார். கடந்த ஜூன் மாதம் 18-ம் தேதி திடீரென்று காணாமல் போனார். பின்னர் 23-ம் தேதி பரிம்போரா பகுதியில் உள்ள ஜீலம் ஆற்றங்கரையோரம் அவர் பிணமாக கிடந்தார்.
நன்றாக படிக்கக்கூடிய புத்திசாலியான தனது மகனின் பரிதாப முடிவை அறிந்து குழம்பிப்போன ஹிலாலின் தந்தை, அந்தத் தேர்வின் விடைத்தாள்களை மறுகூட்டல் செய்யுமாறு பாலிடெக்னிக் நிர்வாகத்துக்கு மனு செய்தார்.
இதையடுத்து, மறுகூட்டல் செய்தபோது ஏற்கனவே ஹிலால் 28 மதிப்பெண்கள் எடுத்ததாக தெரிவிக்கப்பட்டிருந்த இயற்பியல் பாடத்தில் 48 மதிப்பெண்களும், ஒட்டுமொத்தமாக 70 சதவீதம் மதிப்பெண்களை எடுத்து தனது வகுப்பிலேயே முதல் மாணவனாக அவர் தேர்ச்சி அடைந்திருப்பதும் தற்போது தெரியவந்துள்ளது.
கவனக்குறைவாகவும், அலட்சியமாகவும் தேர்வுத் தாள்களை திருத்தி குறைந்த மதிப்பெண்கள் பெற்றதாக முன்னர் அறிவித்த ஆசிரியர்கள் மீது கொலை வழக்கு போடப்போவதாக ஹிலாலின் தந்தை தெரிவித்துள்ளார். இயற்பியல் தேர்வை எழுதிவிட்டு வீட்டுக்கு வந்த அன்று மாலை, நான் நன்றாக எழுதி இருக்கிறேன் என்று ஹிலால் என்னிடம் நம்பிக்கையுடன் கூறினான்.
அவ்வாறே அதிக மதிப்பெண்களும் பெற்றிருக்கிறான். இதை சரியாக கவனிக்காமல் வெறும் 28 மதிப்பெண்கள் பெற்றதாக முடிவுகளை வெளியிட்டதால் மனமுடைந்து அவன் தற்கொலை செய்து கொண்டான். இது தற்கொலை அல்ல, தவறான மதிப்பெண்களை வெளியிட்டு அவனை கொன்று விட்டார்கள். இதற்கு காரணமான அனைவர் மீதும் கொலை வழக்குப் பதிவு செய்து தண்டனை அளிக்க வேண்டும் என ஹிலாலின் தந்தையான ஹிலால் அஹமத் ஜில்கர் கூறுகிறார்.
இந்த தவறுக்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என பாலிடெக்னிக் நிர்வாகம் அறிவித்துள்ள நிலையில், இதுதொடர்பான செய்திகள் வெளியான பின்னர், இச்சம்பவம் குறித்து விசாரிக்கப்படும் என ஜம்மு-காஷ்மீர் மாநில கல்வித்துறை மந்திரி நயீம் அக்தர் தெரிவித்துள்ளார்.
Average Rating