யாழில் தொடர் மழையால் ஐந்தாயிரம் பேர் பாதிப்பு…!!
யாழ்.குடாநாட்டில் நேற்றும் இன்றும் பெய்த கடும் மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இன்று சனிக்கிழமை (14-11-2015) அதிகாலை முதல் இன்று மாலை வரை பெய்த தொடர் மழை காரணமாக யாழ்.குடாநாட்டின் தாழ்நிலப் பகுதிகள், பல வீதிகள் என்பனவும் வெள்ளத்தில் மூழ்கிக் காணப்படுகின்றன. சில வீதிகளில் போக்குவரத்து நடவடிக்கைகள் முற்றாகத் தடைப்பட்டுள்ளன.
தொடர் மழை காரணமாக வலி.தெற்கு,வலி.வடக்கு ஆகிய பகுதிகளில் பல பகுதிகள் வெள்ளக் காடாகக் காட்சியளிக்கின்றன. குறிப்பாக சுன்னாகம் கந்தரோடையின் ஒருபகுதி, சுன்னாகம் ஐயனார் கோயிலை அண்மித்த பகுதிகளில் வெள்ள நீர் மேவிப் பாய்வதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. ஏழாலை, புன்னாலைக் கட்டுவன், குப்பிளான், ஈவினை, ஊரெழு, சுன்னாகம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் விவசாய நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கியதன் காரணமாக விவசாய நடவடிக்கைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.
தொடர் மழை காரணமாக யாழ்ப்பாணம்,சண்டிலிப்பாய்,சாவகச்சேரி உள்ளிட்ட பிரதேச செயலகத்துக்குட்பட்ட 1400 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 5000 இற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் என்.வேதநாயகன் தெரிவித்தார். மழை காரணமாக யாழ்.மாவட்டத்திலுள்ள 254 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்ததாகவும் அவர் சுட்டிக் காட்டினார்.
Average Rating