அரும்பாக்கம் என்.எஸ்.கே. நகரில் மழை வெள்ளத்தில் 650 குடிசைகள் மூழ்கின..!!
சென்னையில் திரும்பும் திசையெல்லாம் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. பெருக்கெடுத்து ஓடும் மழைநீர் மற்றும் ஏரி தண்ணீர் குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்து நிற்கிறது. அரும்பாக்கம் என்.எஸ்.கே. நகரில் 650 வீடுகள் வெள்ளத்தில் மிதக்கிறது.
கோயம்பேடு மேம்பாலத்தின் கீழ் கூவம் ஆறு நிரம்பி அருகில் உள்ள குடிசை பகுதியில் புகுந்தது. இதனால் நூற்றுக்கணக்கான குடிசைகள் தண்ணீரில் மூழ்கி கிடக்கின்றன.
விருகம்பாக்கம் கால்வாயில் பெருக்கெடுத்த வெள்ளம் புகுந்ததால் நெற்குன்றத்தில் 500–க்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது.
மதுரவாயல் மெயின் ரோட்டில் இருந்து பாடிகுப்பம் செல்லும் பாதையில் உள்ள தரைப்பாலம் தண்ணீரில் மூழ்கி விட்டது. இதனால் அந்த வழியாக போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.
பள்ளிக்கரணை நாராயணபுரம் ஏரி உடைந்ததால் அந்த பகுதியில் உள்ள 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் வெள்ளத்தில் மிதக்கிறது.
வீடுகளை விட்டு பொதுமக்கள் வெளியே வரமுடியாமல் தவித்தனர். உடனடியாக அந்த பகுதிக்கு தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் சுமார் 40 பேர் அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்கள் ரப்பர் படகுகள் மூலம் பொதுமக்களை பத்திரமாக மீட்டனர்.
நங்கநல்லூர், மடிப்பாக்கம் ராம்நகர், வேளச்சேரி தண்டீஸ்வரம், விருகம்பாக்கம் ஏரிக்கரை, வியாசர்பாடி, புளியந்தோப்பு, பாடிகுப்பம், கொளத்தூர், கார்கில் நகர், அன்னை சிவகாமி நகர் உள்பட பல பகுதிகளில் தண்ணீர் சூழ்ந்து நிற்கிறது.
சுமார் 2 லட்சம் வீடுகள் வெள்ளத்தில் மிதக்கின்றன. அடுக்குமாடி வீடுகளில் தரை தளங்கள் வெள்ளத்தில் மூழ்கி விட்டன. வீடுகளில் இருந்தவர்கள் மேல் தளங்களில் தஞ்சம் புகுந்துள்ளனர்.
Average Rating