சொந்த இடத்தில் குடியேற்றுங்கள் : முதல்வரிடம் கோணாப் புலனாய்வு முகாம் மக்கள் கோரிக்கை..!!
இடம்பெயர்ந்த மக்கள் பாடசாலைகளில் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்கினேஸ்வரன் இன்று நேரில் சென்று பார்வையிட்டார்.
நாட்டில் நிலவிய அசாதாரண காலநிலையை அடுத்து கடந்த நாட்களில் அடைமழையினால் வடமாகானத்தில் மட்டும் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டதோடு சுமார் 20 ஆயிரம் பேர் பொது இடங்களில் தஞ்சமடைந்துள்ளனர்.
இவ்வாறு பொது இடங்களில் தங்கியுள்ள மக்களை நேரில் சென்று சந்தித்து அவர்களின் தேவைகள் தொடர்பில் கேட்டறிந்து கொண்டார்.
கடந்த 25 வருடகாலமாக இரண்டாவது தலைமுறையினரும் இவ்வாறு இடைத்தங்கல் முகாமில் வாழ்ந்துவரும் தங்களைச் சொந்த இடங்களில் மீள்குடியேற்ற நடவடிக்கை எடுக்குமாறு வடமாகாண முதலமைச்சரிடம் முகாம் மக்கள் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.
இவ்விஜயத்தின் போது மல்லாகம் மகா வித்தியாலயத்தில் தங்கியுள்ள தெல்லிப்பழை பிரதேச செயலகத்திற்குட்பட்ட கல்லாரை கிராம j/212 வெள்ளத்தால் பாதித்த மக்களின் அடிப்படை சுகாதார ஏற்பாடு, குடிநீர் பிரச்சினை, உணவு சமையல்கூடப் பிரச்சினைகள் தொடர்பிலும் கேட்டறிந்து கொண்டதோடு நிலமைகளை நேரிலும் பார்வையிட்டார்.
இதனைத் தொடர்ந்து இடம்பெயர்ந்து 25 வருடங்களுக்கு மேலாக கோணாப்புலவு இடைத்தங்கள் முகாமில் வசிக்கும் மக்களின் அவலத்தையும் நேரில் பார்வையிட்டு அவர்களிற்கான உடனடித் தேவைகள் தொடர்பிலும் கேட்டறிந்து கொண்டதோடு வட மாகாண சபையின் விவசாய அமைச்சின் உணவு வழங்கல் பகுதியினரின் ஏற்பாட்டில் இம் மக்களிற்கான உணவுப் பொதிகளையும் வழங்கிவைத்தார்.
இதன்போது விவசாய அமைச்சர் ஐங்கரநேசன், தெல்லிப்பளை பிரதேச செயலாளர் உள்ளிட்டோரும் கலந்து கொண்டிருந்தனர்.
Average Rating