தொழிலாளர் நலனுக்காக பத்திரிகையாளர் சந்திப்பில் தீக்குளித்த தொழிற்சங்க தலைவர்…!!
மங்கோலியாவில் நிலக்கரி சுரங்கங்கள் தனியார் மயமாக்கப்படுவதைக் கண்டித்து பத்திரிகையாளர் சந்திப்பின்போது தொழிற்சங்க தலைவர் தீக்குளித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
மங்கோலியாவின் நிலக்கரி சுரங்கத்தொழில் ஏகபோக உரிமையை சீனாவைச் சேர்ந்த ஒரு நிறுவனம் பெற்றுள்ளது. இதையடுத்து, நாடு முழுவதும் 39 சுரங்கங்களை நிர்வகித்து வரும் மங்கோலிய நிறுவனத்தை அந்த நிறுவனம் வாங்கியுள்ளது. இதனால், அதில் பணியாற்றும் தொழிலாளர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.
சீன நிறுவனம் தனது நாட்டில் இருந்து தொழிலாளர்களை பணியமர்த்தி சுரங்கங்களை இயக்கலாம் என்ற அச்சமும் ஏற்பட்டதால் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுதொடர்பாக தலைநகர் உலான்பாதரில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் தொழிற்சங்க தலைவர் மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டு தங்கள் போராட்டம் குறித்து விளக்கம் அளித்துக்கொண்டிருந்தனர். அப்போது, ‘அரசின் நடவடிக்கையால் நாங்கள் பட்டினியால் கிடக்கிறோம். மங்கோலிய மக்களுக்காகவும், நமது குழந்தைகளுக்காகவும் நான் என்னையே எரித்துக்கொள்கிறேன்’ என்று ஆவேசமாகப் பேசிய சங்கத் தலைவர், திடீரென தனது உடலில் எண்ணெய் ஊற்றி தீ வைத்துக்கொண்டார். இதனால், திடீர் பரபரப்பு ஏற்பட்டது.
வலியால் துடித்த அவர் தீயை அணைக்க முயன்றதும் சக தொழிலாளர்கள் தீயை அணைத்தனர். தீ பற்றி எரியும்நிலையில்கூட அவர் அருகில் இருந்த இரண்டு தொழிலாளர்கள், எதிர்ப்பு வாசகம் கொண்ட பதாகைகளை ஏந்திக்கொண்டு நின்றனர்.
தொழிலாளர்களுக்காக உயிரை பணயம் வைத்த தொழிற்சங்க தலைவர், உடல் முழுவதும் தீக்காயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அங்கு அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Average Rating