“அதிகாரத்தை பகிர்ந்து கொடுங்கள்” இலங்கைக்கு இந்தியா அறிவுரை
தமிழர்களுக்கு அதிகாரத்தை பகிர்ந்து அளிக்கும் ஒப்பந்தத்தை விரைவில் நிறைவேற்ற வேண்டும் என இலங்கைக்கு இந்தியா அறிவுறுத்தியுள்ளது. உகாண்டா நாட்டில் உள்ள கம்பாலாவில் காமன்வெல்த் மாநாடு நடக்க உள்ளது. இதில் பங்கேற்க வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி கம்பாலா சென்றுள்ளார். அங்கு இலங்கை வெளியுறவு அமைச்சர் ரோகிதா பொக்கலகாமாவை, பிரணாப் முகர்ஜி சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு 40 நிமிடங்கள் வரை நீடித்தது. அப்போது தமிழர்களுக்கு அதிகாரத்தை பகிர்ந்து அளிக்கும் ஒப்பந்தத்தை விரைவில் நிறைவேற்ற வேண்டும் என பிரணாப் முகர்ஜி வலியுறுத்தினார். அதற்கு பொக்கலகாமா, “இந்த ஒப்பந்தத்தை தயாரிக்க அனைத்து கட்சிகளின் பிரதிநிதிகள் அடங்கிய கமிட்டியை அதிபர் ராஜபக்சே ஏற்படுத்தியுள்ளார். இந்த ஒப்பந்தம் இந்த ஆண்டு இறுதிக்குள் அமலுக்கு வந்து விடும்’ என்றார். இலங்கை பார்லிமென்ட்டில், சமீபத்தில், இலங்கை சுதந்திரா கட்சியின் ஆதரவு பெறாமலேயே பட்ஜெட் நிறைவேற்றப்பட்டது. தமிழர்களுக்கு அதிகாரத்தை பகிர்ந்து அளிக்கும் ஒப்பந்தத்தையும் இதே போல நிறைவேற்றலாம் என பிராணப்முகர்ஜி சுட்டிக் காட்டினார். மேலும், விடுதலை புலிகள் அமைப்புடன் தொடர்ந்து பேச்சு வார்த்தை நடத்த வேண்டும் எனவும் பிரணாப் எடுத்து கூறினார்.