நான் கர்ப்பிணி இல்லை நடிகை காவேரி பேட்டி
எனது கணவரின் இரண்டாவது திருமணத்தை போலீசார் தடுத்து நிறுத்தியுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. நான் கர்ப்பிணியாக இருப்பதாக வெளியான செய்தி தவறானது,” என்று நடிகை காவேரி கூறினார். நடிகை காவேரி நேற்று கூறியதாவது: கேமராமேன் வைத்தியுடன் 1998ம் ஆண்டு எனக்கு ஏற்பட்ட பழக்கம், 2003ம் ஆண்டு காதலாக மாறியது. திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி, அவர் என்னை காதலித்தார். அவருடைய தாயார் எங்கள் திருமணத்திற்கு சம்மதிக்கவில்லை. இதனால் தான் அவர் என்னுடன் சேர்ந்து வாழ மறுக்கிறார். என் திருமணத்திற்கான ஆதாரத்தை போலீசில் கொடுத்துள்ளேன். தேவைப்பட்டால், இன்னும் நிறைய ஆதாரங்களை வெளியிடுவேன். வைத்தி என்னை எப்படி காதலித்தார் என்பது எங்கள் இருவருக்கும் மட்டும் தான் தெரியும். எனது கணவரின் இரண்டாவது திருமணத்தை போலீசார் தடுத்து நிறுத்தியுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. உயிருக்கு உயிராக காதலித்து திருமணம் செய்து கொண்ட அவர், என்னுடன் தான் வாழவேண்டும். வேறு பெண்ணை திருமணம் செய்து கொள்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. அப்பெண்ணை வேறு ஒருவருக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும். ஏற்கனவே திருமணமாகி விட்டதால், என்னால் அந்த வாழ்க்கையை தியாகம் செய்ய முடியாது. கணவர் கூறியதால், ஐந்து “டிவி’ தொடர்களில் நடிப்பதை தவிர்த்து விட்டேன். நான் மூன்று மாத கர்ப்பிணியாக இருக்கிறேன் என்று வெளியான செய்தி தவறானது. புகாரை சரியாக படிக்காததால் இந்த தவறு நடந்துள்ளது. திருமணத்தை வைத்தி எப்படி மறுத்தார் என்று தெரியவில்லை. அவருடன் நான் மனம் திறந்து பேச வேண்டும்.இவ்வாறு காவேரி கூறினார்.