வேலூரில் பாலாறு வெள்ளத்தில் முழ்கி மாணவன் பலி: 2–வது நாளாக உடலை தேடும் பணி தீவிரம்…!!
வேலூர் அருகே திருமணி கிராமத்தைச் சேர்ந்தவர் துளசி (52) கால்நடை மருத்துவமனையில் உதவியாளராக உள்ளார். இவரது மனைவி பத்மா. இவர்கள் தங்கள் 2 மகன்களில் ஒருவருடன் வேலூரில் தங்கி உள்ளனர்.
இவர்களது இரண்டாவது மகன் சதீஷ் (24) சென்னையில் உள்ள கால்நடை மருத்துவ உதவியாளர் பயிற்சி மையத்தில் படித்து வந்தார்.
இந்நிலையில் தொடர் மழையின் காரணமாக பயிற்சி மையத்தில் விடுமுறை அளிக்கப்பட்டது. எனவே அவர் சொந்த கிராமத்திற்கு வந்துள்ளார். நேற்று மாலை 4.30 மணியளவில் பாலாற்றில் தண்ணீர் செல்வதைப் பார்க்க அதே கிராமத்தை சேர்ந்த சங்கர் (26) சந்தோஷ் (12) ஆகியோருடன் சதீஷ் வேலூர் அருகே மேல்மொணவூர் பாலாற்றுக்கு வந்துள்ளார்.
மழை வெள்ளத்தை பார்த்து உற்சாகம் அடைந்த சதீஷ், சந்தோஷ் ஆகியோர் ஆற்றில் இறங்கினர். அதே நேரத்தில் ஆந்திராவில் பேத்தமங்கலம் அணை நிரம்பியதால் தண்ணீர் திறந்து விடப்பட்டிருந்தது. இதனால் தண்ணீர் வேகம் அதிகமாக காணப்பட்டது.
அப்போது திடீரென்று சதீஷ், சந்தோஷ் இருவரும் சுமார் 20 அடி ஆழமுள்ள புதை குழியில் சிக்கிக் கொண்டனர். இதைப் பார்த்ததும் கரைமேல் நின்றிருந்த சங்கர் உடனே கூச்சலிட்டு அருகில் இருந்த பொதுமக்களை உதவிக்கு அழைத்துள்ளார்.
இதையடுத்து மேல்மாணவூர் பகுதியை சேர்ந்த சிலர் ஆற்றில் நீந்திச் சென்று வெள்ளத்தில் மூழ்கிக் கொண்டிருந்த சந்தோசை முதலில் காப்பாற்றினர். அடுத்து சதீஷை மீட்க முயன்றபோது நீரில் மூழ்கிவிட்டார்.
இதையடுத்து அங்கிருந்த பொதுமக்கள் வேலூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். வாலிபர் ஆற்றில் முழ்கிய தகவல் அறிந்து வேலூர் தாசில்தார் விஜயன் வருவாய் ஆய்வாளர் முரளிதரன் கிராம நிர்வாக அலுவலர் சக்கரவர்த்தி அகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்பு பணிகளை தீவிரப்படுத்தினர்.
இதையடுத்து வேலூர் மாவட்ட தீயணைப்பு அலுவலர் முருகன் மற்றும் தீயணைப்பு படை மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
லைப் ஜாக்கெட்டுகளுடன் ஆற்றுக்குள் இறங்கிய வீரர்கள் ஆற்றின் இருகரைகளையும் இணைக்கும் வகையில் தடுப்பு கயிறு கட்டி தேடும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் ஆற்றில் தண்ணீரின் வேகம் அதிகமாக இருப்பதால் சிரமம் ஏற்பட்டது.
நேற்று இரவு வரை தேடியும் உடல் கிடைக்கவில்லை. இன்று காலை முதல் மீண்டும் உடலை தேடும் பணி நடக்கிறது. இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Average Rating