ஈரோட்டில் கடித்த பாம்புடன் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சை பெற வந்த வாலிபர்…!!
ஈரோடு மாவட்டம் சிவகிரி அடுத்த காகம் காந்திபுரத்தை சேர்ந்தவர் சின்னசாமி. இவரது மகன் சிவகுமார் (வயது 27). டெய்லர்.
நேற்று இரவு சிவக்குமார் வீட்டு வாசலில் படுத்து தூங்கினார்.
அப்போது நள்ளிரவில் அங்கு வந்த ஒரு பாம்பு சிவக்குமாரை கடித்து விட்டது. உடனே வலி தாங்க முடியாமல் சிவக்குமார் எழுந்து பார்த்தார்.
ஒரு பாம்பு தன்னை கடித்து விட்டு செல்வதை அவர் பார்த்தார். உடனே பாம்பை அருகில் கிடந்த கம்பை எடுத்து அடித்து கொன்று விட்டார்.
பின்னர் இன்று காலை கடித்த பாம்பை ஒரு பையில் போட்டு கொண்டு ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு வந்தார்.
அங்கு இருந்த டாக்டரிடம், தன்னை இந்த பாம்பு தான் கடித்து விட்டது. அதை நான் கொன்று விட்டேன். எனவே எனக்கு சிகிச்சை அளிக்க வேண்டும்’’ என்று கூறினார்.
அப்போது அவர் பையில் இருந்து பாம்பை வெளியில் எடுத்ததால், அருகில் நின்ற நோயாளிகள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். இதனால் அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர் டாக்டர்கள், சிவக்குமாரை பரிசோதித்து சிகிச்சை அளித்தனர். அவர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.
Average Rating