மரக்காணம் அருகே பியூட்டி பார்லருக்கு சென்ற மணப்பெண் கடத்தல்…!!
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள முறுக்கேரி பகுதியை சேர்ந்தவர் ஆனந்தன், விவசாயி. இவரது மகள் திவ்யா (வயது 19). பிளஸ்–2 படித்துள்ளார். தற்போது தையல் வகுப்புக்கு சென்று வந்தார். இவருக்கும், வடகோட்டிப்பாக்கம் பகுதியை சேர்ந்த இவரது தாய் மாமன் மகன் முத்துக்குமரனுக்கும் (22) திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இன்று காலை முறுக்கேரியில் உள்ள திருமண மண்டபத்தில் திருமணம் நடைபெற இருந்தது. திருமண அழைப்பிதழ்கள் அடித்து அனைவருக்கும் கொடுக்கப்பட்டது. திருமண ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வந்தது. திருமண மண்டபத்திற்கு நேற்று மதியம் மணமகன் மற்றும் மணமகள் உறவினர்கள் வந்தனர்.
இந்த நிலையில் மணமகள் திவ்யா மணப்பெண் அலங்காரம் செய்து கொள்வதற்காக தனது தோழிகளுடன் நேற்று மதியம் சிறுவாடியில் உள்ள ஒரு பியூட்டி பார்லருக்கு சென்றார். பின்னர் அவர் திரும்பி வரவில்லை. பல இடங்களில் தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. அவர் எங்கு சென்றார் என்று தெரியவில்லை. இதேநேரத்தில் அந்த பகுதியை சேர்ந்த வாலிபர் நாகராஜையும் காணவில்லை.
இதுதொடர்பாக பிரம்மதேசம் போலீசில் ஆனந்தன் ஒரு புகார் மனு கொடுத்தார். அதில் திவ்யாவை 8 பவுன் நகை மற்றும் ரூ.13 ஆயிரம் ரொக்க பணத்துடன் முறுக்கேரியை சேர்ந்த நாகராஜ் (23) கடத்தி சென்று விட்டதாக குறிப்பிட்டிருந்தார். இதையொட்டி நாகராஜ் குடும்பத்தினரை இன்ஸ்பெக்டர் சக்திவேல் அழைத்து விசாரணை நடத்திவருகிறார்.
கடத்தப்பட்ட திவ்யாவையும் அவரை கடத்தி சென்ற நாகராஜையும் போலீசார் பல்வேறு பகுதியில் தேடி வருகின்றனர். அவர்கள் இதுவரை கிடைக்கவில்லை.
மணப்பெண் திவ்யா கடத்தப்பட்டதால் முறுக்கேரியில் இன்று நடைபெற இருந்த திருமணம் நின்றது. உறவினர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Average Rating