நிருபருக்கு அடி-ஆர்த்தி குடும்பம் கைது
திடீர் திருமணம் செய்து கொண்ட தெலுங்கு நடிகை ஆர்த்தி அகர்வாலின் தந்தை, சகோதரி, சகோதரர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். தற்கொலை முயற்சி புகழ் ஆர்த்தி திடீரென ஹைதராபாத் ஆர்ய சமாஜ் ஆசிரமத்தில் வைத்து உஜ்வால் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இதே ஆசிரமத்தில்தான் மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் மகள் ஸ்ரீஜாவும் வீட்டை விட்டு ஓடி வந்து காதலரைத் திருமணம் செய்து கொண்டார் என்பது நினைவிருக்கலாம். ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த உஜ்வால் குமார் அமெரிக்காவின் பிரபல வங்கியில் வேலை பார்க்கிறாரார். ஆர்த்தி அகர்வால் திருமணத்தை படம் பிடிக்க திரண்ட பத்திரிகையாளர்களை ஆர்த்தியின் தந்தை சஷாங் அகர்வால் தாக்கினார். அதேபோல சகோதரி அதிதி அகர்வால், சகோதரர் தேனா அகர்வால் ஆகியோரும் பத்திரிக்கையாளர்களைத் தாக்க ஆரம்பித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இந்தத் தாக்குதலில் ஒரு டிவி நிறுவன நிருபர் லேசான காயமடைந்தார். இதையடுத்து அந்த நிருபர் காந்தி நகர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்தப் புகாரின் பேரில், சஷாங்க், அதிதி, தேனா ஆகியோரை போலீஸார் கைது செய்து அவர்கள் மீது ஜாமீனில் வெளியே வர முடியாத 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.