தஞ்சை மருத்துவகல்லூரி மருத்துவமனையில் புதிய அறுவை சிகிச்சை மையம்: கலெக்டர் திறந்து வைத்தார்…!!
தஞ்சை மருத்துவகல்லூரி மருத்துவமனையில் ரூ. 25 லட்சம் செலவில் உருவாக்கப்பட்ட புதிய அறுவை சிகிச்சை மையங்களை மாவட்ட கலெக்டர் சுப்பையன் திறந்து வைத்தார்.
தஞ்சை மருத்துவகல்லூரி மருத்துவமனையில் முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவகாப்பீட்டு திட்டத்தின் கீழ் கிருமித் தொற்றுள்ள நோயாளிகளுக்கான அறுவை சிகிச்சை கூடம், உடனடி அறுவை சிகிச்சை பிரிவு, மாணவர்களுக்கான நேரடி அறுவை சிகிச்சை ஒளிபரப்பு மற்றும் விளக்கக்கூடம் ஆகியவை சுமார் ரூ. 25 லட்சம் செலவில் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த அறுவை சிகிச்சை கூடத்தின் திறப்பு விழா இன்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மருத்துவகல்லூரி முதல்வர் டாக்டர் சிங்காரவேலு இதில் தலைமை தாங்கினார். மாவட்ட கலெக்டர் சுப்பையன் கலந்து கொண்டு புதிய அறுவை சிகிச்சை கூடங்களை திறந்து வைத்து பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:–
தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மட்டுமே இதுபோன்ற அறுவை சிகிச்சை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதன்படி முதல் அமைச்சரின் விரிவான மருத்துவகாப்பீட்டு திட்டத்தின் கீழ் தஞ்சை மருத்துவகல்லூரி மருத்துவமனையில் ரூ. 25 லட்சம் செலவில் இந்த அறுவை சிகிச்சை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
முன்பு சிறிய அளவிலான அறுவைசிகிச்சைக்கு சுமார் 4 நாட்களுக்கு மேல் மருத்துவமனையில் தங்க வேண்டிஇருக்கும். இந்த சூழ்நிலையை மாற்றி தற்போது திறக்கப்பட்டுள்ள அறுவை சிகிச்சை கூடங்களால் காலையில் மருத்துவமனைக்கு வந்து அன்றே அறுவை சிகிச்சை முடிந்து மாலை வீட்டிற்கு திரும்பி விடலாம். இதனால் அவர்கள் வேலைக்கு விடுமுறை எடுத்து மருத்துவமனையில் தங்க வேண்டிய சூழ்நிலை இருக்காது.
மேலும் தேவையற்ற செலவுகளும் மிச்சமாகும். இந்த அறுவை சிகிச்சை முறை தஞ்சை மற்றும் இதனை சுற்றியுள்ள மக்களுக்கும் பயனுள்ளதாக அமையும். இவ்வாறு அவர் கூறினார்.
Average Rating