ஏமனில் ராணுவ நிலைகள் மீது தீவிரவாதிகள் தாக்குதல்: 15 வீரர்கள் பலி…!!
ஏமனில் ராணுவ நிலைகளின் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல்களில் 15 வீரர்கள் கொல்லப்பட்டனர்.
தென்கிழக்கு ஏமனில் உள்ள ஹத்ராமாட் மாகாணத்தில் அல் கொய்தா தீவிரவாதிகள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். தலைநகர் முகல்லாவை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். இதனை மீட்க ராணுவம் தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளது.
இந்நிலையில், ஷிபம் நகர் அருகே உள்ள இரண்டு ராணுவ நிலைகளை குறிவைத்து தீவிரவாதிகள் இன்று தாக்குதல் நடத்தினர். இதில், 15 வீரர்களும், 19 ஜிகாதிக்களும் கொல்லப்பட்டதாக ராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த தாக்குதலில் பொதுமக்கள் பலரும் காயமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலுக்கு அல்கொய்தா பொறுப்பேற்றதாக முதலில் ராணுவ தரப்பில் தெரிவிக்கப்பட்டது. தற்போது ஐ.எஸ். அமைப்பு இதற்கு பொறுப்பேற்றுள்ளது. தாக்குதலில் 50 வீரர்களை கொன்றுவிட்டதாகவும், தங்கள் தரப்பில் தற்கொலைப்படை தாக்குதலில் ஈடுபட்ட ஒரே ஒருவர் மட்டுமே இறந்ததாகவும் ஐ.எஸ். செய்தி வெளியிட்டுள்ளது. தாக்குதல் நடந்த பகுதியில் தொடர்ந்து சண்டை நடந்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளது.
Average Rating