23 விடுதலைப்புலிகள் பலி; இலங்கையில் ராணுவம் தீவிர தாக்குதல்
இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கும், சிங்கள ராணுவத்துக்கும் இடையே வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் கடந்த சில நாட்களாக கடுமையான சண்டை நடைபெற்று வருகிறது. இருதரப்பினருக்கும் நேற்றும் பல பகுதிகளில் கடும் மோதல் நடந்தது. வடமேற்கு மன்னார் மாவட்டத்தில் ராணுவம் நடத்திய 2 வெவ்வேறு தாக்குதல்களில் 8 விடுதலைப்புலிகள் பலியானார்கள். கிழக்கு திரிகோணமலையின் பலாத்தோப்பூர் பகுதியில் பாதுகாப்பு படையினர் தாக்கியதில் 2 விடுதலைப்புலிகள் உயிரிழந்தார்கள். அவர்களிடம் இருந்து நவீன ரக எந்திர துப்பாக்கிகளும் கைப்பற்றப்பட்டன. யாழ்ப்பாணம், விளாத்திகுளம், குடுரிவிட்டான், குருஞ்சான், தாம்பான் குளம் ஆகிய பகுதிகளில் ராணுவம் தாக்குதல் நடத்தியதில் மேலும் 13 விடுதலைப்புலிகள் கொல்லப்பட்டதாக இலங்கை ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த சண்டைகளின்போது ராணுவ தரப்பில் 5 வீரர்கள் படுகாயம் அடைந்ததாகவும், விடுதலைப்புலிகள் அமைப்பில் வலுக்கட்டாயமாக சேர்க்கப்பட்ட பொதுமக்கள் 4 பேர் ராணுவத்திடம் சரண் அடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.