நியூசிலாந்து பனிமலையில் ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியது: 7 பேர் பலி…!!
நியூசிலாந்தில் இன்று ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் 6 சுற்றுலாப் பயணிகள் உள்ளிட்ட 7 பேர் உயிரிழந்தனர்.
சுற்றுலாத் தலமான தெற்கு தீவில் உள்ள பாக்ஸ் பனிமலைக்கு, தனியார் நிறுவனத்தைச் சேர்ந்த ஹெலிகாப்டரில் இன்று சுற்றுலாப் பயணிகள் புறப்பட்டுச் சென்றனர். இங்கிலாந்தைச் சேர்ந்த 4 பேர், ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த 2 பேர் மற்றும் பைலட் என மொத்தம் 7 பேருடன் சென்ற அந்த ஹெலிகாப்டர், பாக்ஸ் பனிமலையை நெருங்கியபோது அதன் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது.
இதனால் அதிர்ச்சியடைந்த அதிகாரிகள், ஹெலிகாப்டரைக் காணவில்லை என காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். உடனே ஹெலிகாப்டர்களில் சென்ற மீட்புக்குழுவினர் சம்பவ இடத்தில் உடைந்து கிடந்த ஹெலிகாப்டர் பாகங்களை கண்டுபிடித்தனர். எனவே, விபத்தில் அனைவரும் இறந்திருக்கலாம் என்றும், ஒருவரும் உயிர்பிழைத்திருப்பதற்கான அறிகுறி தென்படவில்லை என்றும் போலீசார் தெரிவித்தனர்.
அதேசமயம், மோசமான வானிலை நிலவுவதால் சடலங்களை மீட்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. நாளை காலையில் வானிலை சீரானதும் சடலங்களை மீட்க முடியும் என்று போலீஸ் இன்ஸ்பெக்டர் தெரிவித்தார்.
Average Rating