நடிகை கணவர் முன்ஜாமீன் மனு
நடிகை காவேரி புகார் மீதான வழக்கில், முன்ஜாமீன் கோரி ஒளிப்பதிவாளர் வைத்தி, சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். அதில் வைத்தி கூறியிருப்பதாவது: நான் நான்கு திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளேன். என் மீது நடிகை காவேரி பொய்ப் புகார் கொடுத்துள்ளார். டி.வி. சீரியலின்போது அவரை சந்தித்தேன். இருவரும் நண்பர்களாகத்தான் பழகினோம். அவரை நான் காதலிக்கவே இல்லை. ஆனால் தன்னை மணந்துகொள்ள செல்போன் மூலம் எனக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பிக் கொண்டே இருந்தார். நான் மறுத்து விட்டேன். எனக்கு ஒரு மாதம் முன்பு திருமணம் நிச்சயிக்கப்பட்டது. 5ம் தேதி காவேரியிடம் திருமணப் பத்திரிகை கொடுத்தேன். அதை பார்த்ததும் அவருக்கு என் மீது கோபம். இதனால் போலீசில் பொய் புகார் கொடுத்து, புதுக்கோட்டையில் நடக்க இருந்த திருமணத்தை தடுத்து நிறுத்தி விட்டார். காவேரி போலீசில் கொடுத்த புகாரில், அவர் 3 மாதம் கர்ப்பம் என்று கூறியுள்ளார். டி.வி.க்கு அளித்த பேட்டியில் கர்ப்பம் இல்லை என்று கூறியுள்ளார். மருத்துவப் பரிசோதனைக்கும் மறுத்து விட்டார். கோயிலில் திருமணம் நடந்ததாக முதலில் கூறினார். பின், ஒரு வீட்டில் திருமணம் நடந்ததாக கூறினார். அவர் சொல்வது அனைத்தும் பொய். அவருடன் திருமணம் நடக்கவே இல்லை. நான் கவுரவமான குடும்பத்தை சேர்ந்தவன். காவேரியின் பொய் புகாரில் என்னை கைது செய்வார்கள் என்று அஞ்சுகிறேன். விசாரணைக்கும் மருத்துவ பரிசோதனைக்கும் தயாராக உள்ளேன். எனக்கு முன்ஜாமீன் அளிக்க வேண்டும். இவ்வாறு வைத்தி கூறியுள்ளார். இம்மனு நீதிபதி சுதந்திரம் முன் இன்று விசாரணைக்கு வருகிறது.