பிறந்த ஆண் குழந்தையை ஜன்னல் வழியே வீசி எறிந்த தாய்: கொட்டும் மழையில் நடந்த கொடூரம்…!!
திருப்பூர் மாவட்டம் குன்னத்தூர் விருமாண்டம் பாளையம் சடையம்பதியை சேர்ந்தவர் பிரபு. இவரது மனைவி நந்தினி (வயது 27). இவர்களுக்கு ஏற்கனவே ஒரு குழந்தை உள்ளது.
இந்நிலையில் நந்தினி நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். கணவர் வெளியூர் வேலைக்கு சென்றார். தனியே இருந்த நந்தினிக்கு நள்ளிரவு பிரசவ வலி ஏற்பட்டது. இது குறித்து அவர் யாருக்கும் தெரியப்படுத்தவில்லை.
நீண்டநேரம் பிரசவ வலியால் அவதிப்பட்டார். பின்னர் அழகிய ஆண் குழந்தை பிறந்தது. திடீரென ஆவேசமடைந்த நந்தினி பிறந்த குழந்தையை ஜன்னல் வழியே தூக்கி வெளியே எறிந்தார். மழை மற்றும் கடும் பனியில் குழந்தை வாடியது.
அதிகாலையில் அந்த வழியே சென்ற பொதுமக்கள் குழந்தையின் அழுகுரல் கேட்டு அதிர்ச்சியடைந்தனர். அருகில் சென்று பார்த்தபோது குளிரில் நடுங்கிய நிலையில் ஆண் குழந்தை உயிருக்கு போராடியது.
இது குறித்து குன்னத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. டாக்டர் ரகுபதி தலைமையிலான குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து குழந்தையை மீட்டனர். பின்னர் வீட்டில் மயங்கி கிடந்த நந்தினியையும் மீட்டு சிகிச்சை அளித்தனர்.
தகவல் அறிந்ததும் ஊத்துக்குளி தாசில்தார் இந்திராகாந்தி, நில அளவையர் ராகவி ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
விடிய விடிய கொட்டும் மழையிலும் பனியிலும் கிடந்த குழந்தை ஆபத்தான நிலையில் உள்ளதால் கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு தாயுடன் அனுப்பி வைத்தனர். அங்கு இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
குடும்பத்தகராறு காரணமாக விரக்தியடைந்த நந்தினி பிறந்த ஆண் குழந்தையை வெளியே வீசினாரா? அல்லது வேறு காரணமா? என்று விசாரணை நடைபெறுகிறது.
Average Rating