அஜீத் படத்தில் தீபிகா?
இந்தியில் அணலை மூட்டியுள்ள தீபிகா படுகோன், தமிழுக்கும் வரப் போவதாக ஜிலுஜிலு தகவல் ஒன்று கோலிவுட்டை ரவுண்ட் அடிக்க ஆரம்பித்துள்ளது. அழகுப் புயல் தீபிகாவின் வரவால், பாலிவுட்டில் பல கிளாமர் புயல்களுக்கு, பய சுனாமி தாக்கியுள்ளது. முதல் படமான ஓம் சாந்தி ஓம், படு ஓட்டம் ஓடிக் கொண்டிருப்பதால் தீபிகாவுக்கு பாலிவுட்டில் செமத்தியான வரவேற்பு கிடைத்துள்ளது. பெரிய டிமாண்ட் ஏற்பட்டுள்ளது. அவரைப் புக் பண்ண பெரும் கூட்டமே காத்திருக்கிறது. இந்த நிலையில் தீபிகா தமிழில் நடிக்க வரப் போவதாக ஒரு குட்டிச் செய்தி, கோலிவுட்டில் உலா வர ஆரம்பித்திருக்கிறது. அஜீத் நடிக்க, அவரது ஆத்மார்த்த நண்பரான சரண் இயக்க உருவாகப் போகும் படத்தில்தான் தீபிகா நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது. இது உண்மையா, இல்லையா என்பது தெரியவில்லை. ஆனால் உண்மையாக இருந்தால் இந்தப் படம் பெரிய அளவில் போகும் என்று கோலிவுட் புள்ளி விவரப் புலிகள் ஆரூடம் கூறுகிறார்கள். இந்தியில் புயலைக் கிளப்பியிருந்தாலும், தாய் மொழியான கன்னடத்தில்தான் முதன் முதலில் நடிகையானார் தீபிகா. அவர் கன்னடத்தில் நடித்த முதல் படம் ஐஸ்வர்யா. கூட நடித்தவர் உப்பி என செல்லமாக அழைக்கப்படும் உபேந்திரா. தீபிகாவை தனது படத்தில் நடிக்க வைப்பதற்காக தனக்கு நெருக்கமானவரான ஒரு பாலிவுட் தயாரிப்பாளர் மூலம் காய் நகர்த்தி வருகிறாராம் சரண். பாசிட்டிவ்வான பதில் கிடைக்கும் என்று சரண் தரப்பு நம்புகிறதாம்.
அஜீத்தை வைத்து காதல் மன்னன், அமர்க்களம், அட்டகாசம் என மூன்று படங்களை இயக்கியுள்ளார் சரண். அஜீத்தின் திரையுலக வாழ்க்கையில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தியவரும் சரணே.
இந்த நிலையில் மீண்டும் இருவரும் இணையும் புதிய படமும் திருப்புமுனைப் படமாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு கோலிவிட்டில் எழுந்துள்ளது. இப்படத்தை லண்டன் கருணாஸும், சரணும் இணைந்து தயாரிப்பார்களாம்.