திருமங்கலம் அருகே வாலிபர் வெட்டிக் கொலை…!!
மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே உள்ள வடகரை கிராமம் கிழக்கு காலனியில் சாலையோரத்தில் நீர்வரத்து கால்வாய் உள்ளது. இங்கு தற்போது பெய்து வரும் மழையினால் தண்ணீர் செல்கிறது.
இன்று காலை இந்த தண்ணீரை சிலர் வேடிக்கை பார்த்தனர். அப்போது தண்ணீருக்குள் வாலிபர் உடல் கிடப்பதை கண்ட அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்த தகவல் கிடைத்ததும் வடகரை கிராம நிர்வாக அதிகாரி ராமமூர்த்தி போலீசில் புகார் செய்தார். திருமங்கலம் தாலுகா இன்ஸ்பெக்டர் குருவெங்கட்ராஜ், சப்–இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் ஆகியோர் சம்பவ இடம் சென்று விசாரணை நடத்தினர்.
தண்ணீருக்குள் கிடந்த வாலிபர் உடலை வெளியே எடுத்து பார்த்தபோது தலையில் அரிவாள் வெட்டு காயம் இருப்பது தெரிய வந்தது. இதனால் அவரை யாரோ சிலர் வெட்டிக் கொலை செய்து கால்வாயில் உடலை வீசியிருப்பது தெரிய வந்தது.
சம்பவ இடடத்தில் ரத்தக் கறை படிந்த துணிகள் கிடந்தன. கொலை செய்யப்பட்ட வாலிபர் அணிந்துள்ள பனியனும் கிழிந்துள்ளது. மேலும் உடல் கிடந்த இடத்தில் இருந்து 100 அடி தூரத்தில் ஹெல்மெட் ஒன்றும் கிடந்தது.
இதனால் இரு தரப்பினர் மோதலில் கொலை நடந்ததா? கொலைக்கான காரணம் என்ன? கொலையானவர் யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
இந்நிலையில் போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் கொலையானவர் திருமங்கலம் பாண்டியன் நகர் சின்ன ஊரணியை சேர்ந்த வரதராஜன் மகன் ரஞ்சித்ராம் (வயது 25) என தெரிய வந்துள்ளது. இவர் கப்பலூரில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். இவருக்கு ஹேமலதா என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Average Rating