15 மில்லியன் டாலர் நஷ்டஈடு கேட்கிறார் கடிகாரம் உருவாக்கியதற்காக கைது செய்யப்பட்ட மாணவர்…!!
அமெரிக்காவில் கடிகாரம் உருவாக்கியதற்காக கைது செய்யப்பட்ட மாணவர் 15 மில்லியன் நஷ்டஈடு கேட்டுள்ளார்.
டெக்ஸாஸ் மாகாணத்தில் இர்விங் மாவட்டத்தில் இருக்கும் பள்ளியில் 9-வது கிரேட் படித்துவந்தார் அகமது முகமது(14). இவர் சூடான் வம்சாவளியைச் சேர்ந்தவர்.
புதிய பொருட்களை உருவாக்குவதிலும், அறிவியலிலும் அதிக ஆர்வம் கொண்ட இவர், பென்சில்கள் வைப்பதற்கான சிறு பெட்டியில் சொந்தமாக ஒரு அலாரம் அடிக்கும் கடிகாரத்தைச் செய்து, ஆசிரியையிடம் பெருமையாகக் காட்டியுள்ளார். ஆனால் அவருக்கு கிடைத்தது பாராட்டு அல்ல. அதை வெடிகுண்டு என நினைத்து ஆசிரியர்கள் காவலரை அழைத்தனர். உடனே அகமது கைது செய்யப்பட்டார். பின்னர் காவல்நிலைத்திற்கு கொண்டு செல்லப்பட்டார். இந்த சம்பவம் அமெரிக்கா முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தற்போது முழு உதவித்தொகையுடன் கத்தார் நாட்டில் படித்துவருகிறார் அகமது.
இந்நிலையில், அகமது குடும்பத்தின் வழக்கறிஞர் வெளியிட்டுள்ள அறிகையில், “கடிகாரம் உருவாக்கியதற்காக கைது செய்யப்பட்டது அகமது வாழ்வில் மறக்கமுடியாத தழும்பாக மாறிவிட்டது. மேலும் அவர் கடுமையான உளவியல் அதிர்ச்சியால் பாதிக்கப்பட்டுள்ளார். எனவே, இர்விங் மாவட்ட நிர்வாகம் 10 மில்லியன் டாலரும், அம்மாவட்ட கல்வி நிர்வாகம் 5 மில்லியன் டாலரும் நஷ்டஈடாக கொடுக்க வேண்டும். இது தொடர்பாக 60 நாட்களுக்குள் முறையான பதில் அளிக்காவிடில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும்” என தெரிவித்துள்ளார்.
Average Rating