மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் எபோலா: லைபீரியாவில் 15 வயது சிறுவன் பலி…!!
மேற்கு ஆப்பிரிக்க நாடுகளான கினியா, சியாரா லியோன், லைபீரியா போன்ற நாடுகளில் எபோலா என்ற உயிர்க்கொல்லி வைரஸ் நோய் கடந்த ஆண்டு வேகமாக பரவியது. தொற்று நோயான இந்த எபோலாவால் ஆயிரக்கணக்கான மக்கள் செத்து மடிந்தனர்.
அவர்களுக்கு உதவும் வகையில் ஐ.நா. சபையின் சார்பில் சிகிச்சை அளிக்கச் சென்ற டாக்டர் மற்றும் உதவியாளர்களையும் இந்த நோய் விட்டுவைக்கவில்லை. இதனால், உலக நாடுகளுக்கு இந்த நோய் பெரும் சவாலாக இருந்தது.
உலகம் முழுவதும் இந்நோய்க்கு சுமார் 11 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ள நிலையில், லைபீரியாவில் இருந்து எபோலா முற்றிலும் ஒழிக்கப்பட்டதாக உலக சுகாதார மையம் கடந்த செப்டம்பர் மாதம் தெரிவித்திருந்தது.
இதற்கிடையில், தலைநகர் மான்ரோவியா அருகேயுள்ள பைனெஸ்வில்லி பகுதியை சேர்ந்த ஒரு ஆணுக்கும், அவரது இரு மகன்களுக்கும் கடந்தவாரம் எபோலா நோயின் தொற்று ஏற்பட்டது. அரசு மருத்துவமனையில் உள்ள தனிமைப்படுத்தப்பட்ட சிறப்பு சிகிச்சைப் பிரிவில் அவர்கள் மூவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், இரு மகன்களில் ஒருவனான நாதன் குபோட்டே என்ற 15 வயது சிறுவன் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான். லைபீரியாவில் எபோலா முழுமையாக ஒழிக்கப்படாத நிலையில் எபோலா முற்றிலும் ஒழிக்கப்பட்டதாக அறிவித்திருந்த உலக சுகாதார மையத்துக்கு எதிராக தற்போது கண்டனக் குரல்கள் எழும்பி வருகின்றன.
Average Rating