பரமக்குடி அருகே பா.ஜனதா தலைவர் வெட்டிக்கொலை: மர்ம கும்பலுக்கு வலைவீச்சு…!!
சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் ஒன்றியம் கோளந்தி கிராமத்தைச் சேர்ந்தவர் ரமேஷ் (வயது35). இவர் பா.ஜனதா கட்சியின் ஒன்றிய இளைஞர் அணி தலைவராக இருந்தார்.
இவர் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் கோழிக்கடை நடத்தி வந்தார். மேலும் பழைய லாரி மற்றும் வாகனங்கள் விற்பனை செய்யும் தொழிலும் செய்து வந்தார்.
ரமேஷ் நேற்று இரவு தனது காரில் ராமேசுவரம் சென்று விட்டு ஊருக்கு திரும்பி கொண்டிருந்தார். காரை அவரே ஓட்டினார். நள்ளிரவில் பரமக்குடி–முதுகுளத்தூர் ரோட்டில் தென்பொதுவக்குடி என்ற இடத்தில் அவர் சென்ற காரை ஒரு கும்பல் வழிமறித்தது.
அந்த கும்பலை பார்த்ததும் கீழே இறங்கி தப்ப முயன்ற ரமேசை சுற்றி வளைத்து அரிவாளால் சரமாரியாக வெட்டினர். இதில் அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்தார். அதன் பிறகு கொலை வெறி கும்பல் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்த பரமக்குடி தாலுகா போலீசார் ரமேசின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பரமக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
ரமேஷ் எதற்காக கொலை செய்யப்பட்டார்? இந்த செயலில் ஈடுபட்ட கும்பலை சேர்ந்தவர் யார்–யார்? என்ற விவரம் தெரியவில்லை. போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். ரமேஷ், சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு செல்ல மாலை அணிந்திருந்தார்.
பா.ஜனதா கட்சியின் ஒன்றிய இளைஞர் அணி தலைவர் ரமேஷ் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரமக்குடி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Average Rating