கிளர்ச்சியாளர்களிடமிருந்து தப்பிப்பிழைத்த ரஷ்ய விமானி…!!
சிரியாவிலிருந்து வந்து கொண்டிருந்த SU-24 என்ற ரஷ்ய போர் விமானத்தை துருக்கி நாட்டைச் சேர்ந்த போர் விமானங்கள், துருக்கி-சிரியா எல்லைப்பகுதிக்கருகே, நேற்று காலை சுட்டு வீழ்த்தின.
விமானத்தில் இருந்த விமானிகள் என்ன ஆனார்கள் என்று குழப்பம் நிலவிவந்தது. விமானம் தாக்கப்பட்டதும் விமானத்தில் இருந்த விமானிகள் இருவரும் விமானத்தின் அவசரகால வாசல் மூலம் பாராசூட் பயன்படுத்தி தப்பியதாகவும், அவர்களில் ஒருவரை சிரியா கிளர்ச்சியாளர்கள் சுட்டுக்கொன்றதாகவும் செய்தி பரவிவருகிறது. மேலும் கிளர்ச்சியாளர்கள் அதற்கான ஆதாரத்தையும் வெளியிட்டனர். மற்றொரு விமானி என்ன ஆனார்? எனபது தெரியாமல் இருந்தார்.
இந்நிலையில் ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர் கூறியதாக அந்நாட்டு ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்தியில், ஒரு விமானி உயிருடன் பத்திரமாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது.
மேலும் பிரான்சுக்கான ரஷ்ய தூதர் அலெக்சாண்டர் ஓர்லோவ் ரேடியோ ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் “விமானத்தில் இருந்து பாராசூட் மூலம் தப்பிய இரு விமானிகளில் ஒருவர் கிளர்ச்சியாளர்களால் கொல்லப்பட்டுவிட்டார். மற்றொரு விமானி கிளர்ச்சியாளர்களிடமிருந்து தப்பிவிட்டார். அவரை சிரிய ராணுவம் மீட்டு பாதுகாப்பான இடத்தில் வைத்துள்ளது” என தெரிவித்துள்ளார்.
Average Rating