பாகிஸ்தானில் கடைசி நிமிடத்தில் கைதியின் தூக்கு தண்டனை நிறுத்தம்…!!
பாகிஸ்தானில் கடந்த ஆண்டு இறுதியில் பெஷாவர் ராணுவ பள்ளிக்கூடத்தில் நடந்த தீவிரவாத தாக்குதல்களை தொடர்ந்து, அந்த நாட்டில் மரண தண்டனை நிறைவேற்ற விதிக்கப்பட்டிருந்த தடை விலக்கிக்கொள்ளப்பட்டது. அதைத் தொடர்ந்து இதுவரை 299 பேர் தூக்கில் போடப்பட்டுள்ளனர். 300-வது நபராக நேற்று (புதன்கிழமை), அப்துல் பாசித் என்ற மரண தண்டனை கைதி தூக்கிலிடப்பட இருந்தார். இவர் பக்கவாதத்தாலும், காசநோயாலும் அவதிப்பட்டு வருகிறார். அவரை தூக்கில் போட ஏற்பாடுகள் நடந்து வந்தன.
ஆனால் கடைசி நிமிடத்தில், அவரை தூக்கில் போடுவதை 2 மாதங்களுக்கு நிறுத்தி வைத்து ஜனாதிபதி மம்னூன் உசேன் உத்தரவிட்டார்.
இது தொடர்பாக பாகிஸ்தான் ஜனாதிபதி மாளிகை விடுத்துள்ள செய்திக்குறிப்பில், “எந்த நிலையிலும், மனித உரிமைகளில் சமரசம் செய்து கொள்ள முடியாது” என குறிப்பிடப்பட்டுள்ளது. அப்துல் பாசித்தின் உடல்நிலை குறித்து விசாரணை நடத்தவும் ஜனாதிபதி மம்னூன் உசேன் உத்தரவிட்டுள்ளார்.
2009-ம் ஆண்டு கொலை வழக்கு ஒன்றில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள அப்துல் பாசித்தை, பக்கவாதமும், காசநோயும் தாக்கியுள்ள நிலையில், அவரை தூக்கில் போட மனித உரிமை அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வந்தது குறிப்பிடத்தக்கது.
Average Rating