பாக். தற்கொலைப்படை தாக்குதலில் 25 பேர் பலி
பாகிஸ்தானின் ராவல்பிண்டி நகரில் நடந்த இரண்டு தற்கொலைப் படை தாக்குதல்களில் 25 பேர் உயிரிழந்தனர்.பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத் அருகே உள்ள ராவல்பிண்டியில் 2 தற்கொலைப் படைத் தாக்குதல்கள் நடந்தன. உள்ளூர் நேரப்படி காலை 7.45 மணிக்கு இந்தத் தாக்குதல்கள் நடந்தன. ராணுவ தலைமையகத்தின் நுழைவாயில் மற்றும் ராணுவ வீரர்களை ஏற்றிச் சென்ற பேருந்து ஆகியவை தாக்குதலுக்கு ஆளாகின. இந்த இரு தாக்குதல்களிலும் 25க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். இவர்களில் பெரும்பாலானவர்கள் ராணுவத்தினர். சத்தர் என்ற இடத்தில் உள்ள ராணுவத் தலைமையக நுழைவாயிலில் உள்ள சோதனைச் சாவடியில் இன்று காலை 2 ராணுவ வீரர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு காரில் வந்த ஒரு தற்கொலைப் படைத் தீவிரவாதி, காருடன் நுழைவாயிலில் மோதி குண்டுகளை வெடிக்கச் செய்தார். இந்தத் தாக்குதலில் 3 பேர் உயிரிழந்தனர். இன்னொரு தாக்குதல் ராணுவ வீரர்களை ஏற்றிச் சென்ற பேருந்தில் நடந்தது. காரில் குண்டுகளுடன் வந்த தற்கொலைப் படைத் தீவிரவாதி, ராணுவ வீரர்கள் வந்த பேருந்தில் காரை மோதி வெடிக்கச் செய்தார்.
இந்த சம்பவத்தில் 20க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். பாகிஸ்தான் உளவுப் பிரிவான ஐஎஸ்ஐயின் ஹம்சா முகாமுக்கு அருகே இந்த சம்பவம் நடந்துள்ளது.
இந்த தாக்குதலில் அந்த பேருந்து முழுவதும் எரிந்து சாம்பலானது. பலர் தீயில் கருகி உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்தனர்.
இரு சம்பவங்களிலும் படுகாயமடைந்தவர்கள் உடனடியாக மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர். அவர்களில் பலரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது.
இரு தாக்குதல் சம்பவங்களைத் தொடர்ந்து ராவல்பிண்டி, இஸ்லாமாபாத் ஆகிய இரட்டை நகரங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. சம்பவங்கள் நடந்த இடத்தை ராணுவம் முற்றுகையிட்டு அப்பகுதிக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.