ஊடகத்தின் அச்சக எரிப்பைக் கண்டித்து கொழும்பு கோட்டையில் ஆர்ப்பாட்டம்
சண்டே லீடர் பத்திரிகை அச்சகம் தீக்கிரையாக்கப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து ஐந்து ஊடக அமைப்புக்கள் நேற்று முன்தினம் நண்பகல் கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டமொன்றை நடத்தின. பத்திரிகை அச்சம் தீக்கிரையாக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் சட்டத்தின்முன் நிறுத்தப்பட்டு, தண்டிக்கப்பட வேண்டுமென ஐந்து ஊடக அமைப்புக்களும் கோரிக்கை விடுத்துள்ளன. சுதந்திர ஊடக இயக்கம், இலங்கை தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம், சிறீலங்கா முஸ்லிம் மீடியா போரம், இலங்கை உழைக்கும் பத்திரிகையாளர் சங்கம், ஊடகத்துறை ஊழியர் தொழிற்சங்க சம்மேளனம் ஆகிய ஐந்து ஊடக அமைப்புக்களும் இலங்கை பத்திரிகையாளர் சங்கம், தாய்நாடு எமதே மற்றும் ஊடக அடக்குமுறைக்கு எதிரான இயக்கம் ஆகியனவும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டன. நு}ற்றுக்கும் மேற்பட்ட ஊடகவியலாளர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர். ஊடகங்கள்மீது கைவைக்காதே, தீயிட்டது எதற்காக, ஊடக அடக்குமுறையை நிறுத்து போன்ற வாசகங்கள் அடங்கிய பதாதைகளைத் ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட ஊடகவியலாளர்கள் கோசங்களையும் எழுப்பினர்.