தற்கொலைகளின் வீரவணக்கம்…!! -நோர்வே நக்கீரா (சிறப்புக் கட்டுரை)…!!

Read Time:17 Minute, 20 Second

timthumb (4)தன்னம்பிக்கை, மனவுறுதி, மனிதம், மனிதநேயம் அற்ற மனிதர்களே தற்கொலை செய்து கொள்கிறார்கள். எம்தமிழ்சமூகத்தில் தற்கொலை என்ற ஒன்று இல்லை அத்தனையும் கொலைகளே. தற்கொலை என்ற சொல்லிலேயே கொலை இருக்கிறது உறவுகளே!

கோப்பாயைச் சேர்ந்த கொக்குவில் இந்துக்கல்லூரியில் உயர்தரத்தில் கல்விபயிலும் மாணவனான இராயேஸ்வரன் செந்தூரன் எனும் இளைஞன் கொலை இப்படி ஒரு கட்டுரையை மீண்டும் எழுத வைத்துள்ளது.

கொலை என்று எதற்கு எழுதினேன் என நீங்கள் வினாவலாம். தற்கொலை என்றால் என்ன? தன்னுயிரை தன்விருப்புடன் மாய்த்துக் கொள்வது என்று ஒன்றை வரியில் சொல்லிவிட்டுப் போகலாம்.

கொலை என்பது ஒருவரின் உயிரை இன்னொருவர் எடுப்பது. இந்தச் இளைஞன் செந்தூரனின் கொலையையும் நான் அப்படியே பார்க்கிறேன்.

புலம்பெயர்ந்த நாடுகளில் உ.ம் முருகதாசன் போன்றோர் செய்ததும் தற்கொலை அல்ல கொலை. மாவீரத்தின் பெயரில் செய்யப்பட்ட தற்கொலைத் தியாகங்களும் எனது பார்வையில் கொலையே. இதை மாவீரர் நாளில் எழுதுகிறேன் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஒரு இளைஞனை மூளைச்சலவை செய்து தற்கொலைக்குத் தூண்டி அவனது உயிரை அவனுடலில் இருந்து அகற்றுவது கொலைக்கு நிகரானது. ஐந்தறிவான மிருகங்கள், பறவைகள் செய்யாத தற்கொலையை கேவலம் ஆறு அறிவு என்று எம்மைப் பீத்திக் கொள்ளும் மனிதன் மட்டுமே செய்கிறான்.

மற்றுயிரைக் கொன்று தின்னும் மிருகங்கள் பறவைகளுக்குக் கூட உயிரின் பெறுமதி தெரிந்திருக்கும் போது மனிதனுக்கு மட்டம் இது தெரியாமல் போனது எப்படி?

மனிதன் ஒரு சமூகப்பிராணி. சட்டம், கலாசாரம், பொருளாதாரம் என்று தனக்குத் தானே சிறைகளைப் போட்டுக் கொண்டு மனிதன் மனிதம் எனும் பெருவெளியில் இருந்து தன்னை விடுவித்து சிறைப்பட்டுக் கொள்கிறான். இதுவும் உணர்வுகளை அடைவு வைத்து காலங்காலமாகச் செய்து வரப்பட்ட தற்கொலையே.

சொந்தப்புத்தியில் சிந்திக்காது இன்னொருவனின் புத்தியில் சிந்திப்பதும் அதன்படி வாழ்வதும் தற்கொலைக்குச் சமமானது.

கொண்டு வந்ததும் இல்லை கொண்டு போகப்போவதும் இல்லை என்று போதிக்கும் மதங்களாலும் மனிதன் தற்கொலை செய்திருக்கிறான் என்பதை விட செய்யப்பட்டிருக்கிறான் என்பதே உண்மை.

வரம்பு, வரையறைகளுக்கு அப்பால், உயிர்ப்பின் தத்துவத்தை உணர்ந்து, மனிதமெனும் பெருவெளியில் நின்று சிந்தித்துப்பாருங்கள் உங்களுக்கு இந்த உண்மை புரியும்.

நாம் பெற்றோர்களாலும், தனிமனிதர்களாலும், சமூகத்தாலுமே உருவாக்கப்படுகிறோம். கண்ணதாசன் எழுதியது போல் “எந்தக்குழந்தையும் நல்லகுழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே அது நல்லவராவதும் தீயவராவதும் அன்னை வளர்ப்பினிலே” என்றான்.

ஒரு குழந்தையின் வாழ்வை, குடும்பத்தின் பிரச்சனையை தாய் எனும் பெண்ணில் போட்டுவிட்டு தப்பிப் கொள்ளும் திராணியற்ற ஆண்வர்க்கத்தின் செயற்பாடாகவே இதை நான் பார்க்கிறேன். அப்படி தாயைக் குற்றம் சாட்டும் சமூகம் நெஞ்சை நிமிர்த்திச் சொல்லுமா தாய்கான கல்வி, வாழ்வியல் உண்மை, பொது அறிவு அனைத்தையும் அவள் சுதந்திரத்துடனான, விருப்புடனாகவே இருந்தது என்று.

செய்த குற்றங்களை ஏற்க அதைத் திருத்த வக்கற்றவர்களும் திராணியற்றவர்களுமே பிள்ளைவளர்ப்பு பெண்ணிடம் என்பர். அவளுக்கு பிள்ளைகளை வளர்ப்பதற்குரிய கல்வியையாவது கொடுத்தார்களா? ஊக்குவித்தார்களா? இந்த மனித சமூகமே சீர்கெட்டு பொருளாதாரம் என்று பணப்பேய்களின் பின்னால் அலைவதற்குக் காரணம் யார்? பெண்களா? அவர்கள் வளர்த்தபிள்ளைகளா? நாம் ஒவ்வொருவருமே காரணம் என்பதை அறிக.

மற்றை உலகத்தை விடுவோம் இந்த செந்தூரன் என்ற சமூகப்பிராணி எப்படி வளர்க்கப்பட்டது. அவன் பார்த்தது என்ன? பார்த்துப் படித்தது, உணர்ந்தது என்ன? அநீதிக்கு எதிராக முகம் கொடுத்து நிற்கப்பழக்கப்பட்டானா? வளர்க்கப்பட்டானா? இன்று வாழ்ந்து கொண்டிருக்கும் அனைவரும் இவனை விடச் சிறந்தவர்கள் என்று மார்பு தட்டிக் கொள்ள முடியாது. தயவு செய்து சிந்தித்துப் பாருங்கள் சுயவிமர்சனம் வையுங்கள், விட்ட பிழைகளை திருத்த முயலுங்கள் சமூகம் தானாகவே திருந்தும்.

நாம் கற்காலமனிதர்கள் சொல்லிச் சென்றதைக் கனவாகவும் தேவவாக்காகவும் மனிதப்பேருணர்வை குழிதோண்டிப் புதைக்கும் மதங்களின் வழி நின்றுமே மனிதவாழ்க்கையைப் பார்க்க முயல்கிறோம். இதன் அடிப்படையை எமது வார்த்தைகளில் இருந்தே அதை அறிந்து கொள்ளலாம்.

கம்பர் சொன்னார், வள்ளுவர் சொன்னார் புத்தர் சொன்னார், அல்லா சொன்னார், நபிகள் நாயகமாகச் சொன்னார், கிறிஸ்து சொன்னார், கிருஸ்ணர் சொன்னார் என்கிறார்கள். அதை விட இன்னும் ஒருபடி மேலே போய் தமது கருத்துக்களை கடவுள் சொன்னதாக முழுப்பொய்யை சொல்லி மனிதத்தின் தன்னம்பிக்கையை உடைத்து கேவலங்கேட்ட உலகை உருவாக்கியிருக்கிறன மதங்கள்.

கடவுளைக் கண்டவன் யார். அவனை எனக்குக் காட்டுங்கள். முடியுமா? அல்லா சொன்னார் என்று நபிகளும், கர்த்தர் சொன்னார் என்று கிறிஸ்துவும், பிள்ளையார் சொல்ல வேதங்களை எழுதியதாக வேதவியாசரும் சொன்னார்கள்.

மனிதர்கள் இப்பொய்களை உண்மை என்று நம்பிக் கொண்டு இந்தக் கணினி உலகில் இன்றும் திரிகிறார்கள். இக்கடவுளைக் கண்ட விண்ணர்களுக்கு கணினி என்பது என்ன என்று ஏன் தெரிந்திருக்கவில்லை.

அன்று அது ஏன் பயன்படுத்தவில்லை. உங்கள் கடவுளிடம் இருந்து உங்களால் ஏன் கணினியைப் பெற்று குரான் பைகிள் கீதையை எழுதவில்லை? பொய்மையிலேயே கட்டப்பட்டிருக்கிறது மதமும், வாழ்க்கையும் உலகமும்.

செந்தூரன் என்ற இளைஞன் வாழ்ந்த சமூகம் தன்னம்பிக்கையற்றவர் களால் கட்டி எழுப்பப்பட்டிருந்தது. ஏமாற்றம், எதிர்ப்பு, தன்னம்பிக்கை ஈனம், தற்கொலைக்குத் தூண்டும் கலாச்சாரம் அனைத்துமே இப்படியான இளைஞர்களை கொன்றது.

நாயன்மார்கள் சோதியில் இரண்டறக் கலந்ததைத் தெய்வீகம் என்றோம். அம்பிகாபதி அமராவதி காதலை, கொலையை, தற்கொலையைப் புனிதப்படுத்தினோம். கிறிஸ்தவம், இஸ்லாமிய மதங்களுக்காக உயிர் நீர்ப்பாய் ஆயின் கர்த்தரின் அல்லாவின் காலடியில் சேருகிறாய் என்றும், பெறுமதியற்றது மனித உயிர் என்றே கற்றுக் கொடுத்தோம்.

மனிதர்கள் பாவிகள் என இடித்துரைத்தோம். இவற்றின் பிரதிவிம்பங்களே இத்தற்கொலைகள். ஒரு பறவை மனிதர்களை பெற்று கற்றுத்தந்திருந்தால் மனிதன் சுயமாக வாழ, பறக்கக் கற்றுக் கொண்டிருப்பான்..

கண்மூடித்தனமான நம்பிக்கைகளும், ஏன், எதற்கு என்ற கேள்விகளுக்கு இடம் கொடுக்காத, சரியாகப் பதில் அழிக்காத சமூகங்களிலும், வாழ்க்கை என்பது என்ன என்பதை உணர்ந்து கொள்ளாதவர்களாலுமே இந்தற்கொலை எனும் கொலைகள் நிகழ்ந்த வண்ணம் இருக்கிறது.

ஒருதலைப்பட்சமாக விரும்பும் ஒருவன் அவள் காதலிக்கவில்லை என்றால் தற்கொலை செய்வானாம். இங்கே மிரட்டிப்பணிய வைக்கும் ஒரு பண்பாட்டை கற்றிருக்கிறோம். மற்றைய மனிதர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க மறந்திருக்கிறோம். புனிதமான உயிரை அலட்சியப்படுத்தியிருக்கிறோம்.

தற்கொலை செய்யத் தூண்டியிருக்கிறோம் இதை மாவீரம் என்றும் கொண்டாடியிருக்கிறோம். இந்தச் செந்தூரனின் தற்கொலையைக் கூட மாவீரம் என ஊடகங்கள் இயம்பியிருக்கின்றன

தன்னம்பிகையற்ற இனத்தின் ஒரு வாரிசு தன்நம்பிக்கை அற்றே இருக்கும் என்பதற்கு இன்று நடந்தேறிய தற்கொலை உணர்த்தும். ஐந்தறிவு ஜீவன்களான பறவைகள் மிருகங்களை விடுங்கள். அதைவிட அறிவு குறைந்த புழுக்கள் ஊர்பனவைற்றை உற்று நோக்குங்கள் இறுதிவரை தன்வயிற்றுக்காக தானே உழைக்கும், தற்கொலை செய்யாது, இறுதிவரை போராடும். இந்த வலுவே அற்ற மனிதனை உயிருள்ள ஜீவன் என்று சொல்வதற்கே வெட்கப்படவேண்டும்:

தமிழினத்தின் சுதந்திரத்துக்காக விடுதலைக்காகப் போராடிய, போராடும் எவரின் மனதிலும் சரியான விடுதலை உணர்வு, மனிதநேயம் இருந்ததா? இருந்திருந்தால் சயனைட்டு தேவைப்பட்டிருக்காது. தன்னுயிரையே மதிக்காதவன் பிற உயிர்களை எப்படி மதிப்பான்? மண்ணுகாகப் போராடியவர்கள் மனிதமற்ற மண்ணை வைத்து என்ன செய்ய நினைத்தார்கள்?

தற்கொலைத் தாக்குதல் என்று தற்கொலையை மாவீரம் ஆக்கினோம். தற்கொலைக்குக் தூண்டி அதை நடைமுறைப்படுத்தினோம். வெல்வோம், வாழ்வோம் என்று கற்பித்தோமா? வாழ்வு என்ன என்பதை உணர்த்தினோமா? இச்சமூகத்தில் பிறந்த, வளர்ந்த இவ்விளைஞர்கள் எப்படி வாழ்வை நேசிப்பார்கள்? தயவு செய்து மனச்சாட்டியைத் தட்டிக் கேளுங்கள்.

“தமிழர்களாலேயே தமிழன் கொலை செய்யப்படுகிறான்”

“தமிழனாகச் சிந்திப்பவனுக்கு சகோதரப்படுகொலைகள், சயனைட்டுப்தற்கொலைகள், துரோகிக் கொலைகள் அனைத்தும் தற்கொலைகளே”

தன்னம்பிக்கையில் வளர்க்கப்படாத, வளராத சமூகமே பக்திவாதம் கொள்கிறது. எத்தனை தனிமனிதர்களைப் பக்தியில் உருவாக்கினோம். தங்கிவாழும் ஒரு சமூகம் இதைத்தவிர வேறு எதை எதிர்கொள்ள முடியும். இன்றும் கோசங்களைப் பாருங்கள். தலைவன் வருவான் கல்லாப் பெட்டிகளைக் காலியாக்குங்கள். ஊரில் வாழும் உறவுகளைக் காக்க உதவுங்கள். இவை அனைத்தும் தன்னம்பிக்கையற்ற ஒரு சமூகத்தின் வெளிப்பாடுகளே.

உறுதியான நெஞ்சுரம் கொண்ட மனிதன் வீரன், மாவீரன் இறுதிவரை போராடி இறப்பான். ஒருபோதும் தற்கொலை செய்யான். உண்மையான வீரனுக்கு சயனைட்டுத் தேவையில்லை. சித்திரவதைகளைத் தாங்கும் தைரியமும் உண்மையை வெளியிடாத்தன்மையும் அவனில் வளர்க்கப்பட்டிருந்திருக்கும்.

தமிழர்களின் அரசிலில் என்றும் எதிர்ப்பு அரசியலும், வெறுப்பு அரசியலுமே காலம் காலமாக வளர்த்தெடுக்கப்பட்டது. ஜனநாயகம் என்று சனத்தின் (ஜனத்தின்) நாயகமாக இருந்தது எதிர்ப்பரசியலும் வெறுப்பு அரசியலுமே. இதன் பிரதி பிம்கங்களே பிரபாகரனும், புலிகளும் எம் தமிழ்சமூகமும்.

ஒரு தனிமனிதன் மனிதனே தவிர அவன் கடவுள் அல்ல. அவன் கடவுள் என்றால் நீயும் நானும் கடவுளே. ஒரு எம்ஜியார், கருணாநிதி, ஜெயலலிதா போன்றோர்களுக்காக தீக்குளிப்பது கூட ஒருமனிதனைக் கடவுளாக்கும் செயலே. ஆனால் நீ கடவுளாக முயற்சிக்க வில்லை என்பதே பொருள். இது உனக்கு உன்சமூகம் கற்றுத்தந்த தாழ்வு மனப்பாண்மையின் வெளிப்பாடே.

தலைவன் வருவான் என்று பொய்களைப் பிதற்றும் மனிதப்பதர்களே! இளைஞனாக இருக்கும் உன்னால் முடியாததை 61வயதுக் கிழவனான பிரபாகரன் தான் வந்து செய்யவேண்டும் என்று எதிர்பார்க்கிறாயே வெட்கமாக இல்லையா? உன் கையாலாகாத்தனம் புரியவில்லையா? நீ வாழ்வதற்கே அருகதை உடையவனா? என்று சிந்தித்துப்பார். சரி தலைவன் வந்து என்ன செய்யப்போகிறான்? என்ன செய்யமுடியும்? கொடி, கோட்டை, கொத்தளங்களுடன் இருந்தே முடியாததை 60வயது தாண்டிவந்தா தமிழீழம் கண்டு உனக்குத் தரப்போகிறான். நம்பிக்கையற்ற எளிய, ஏதிலிச் சமூகமே சிந்தித்துப்பார் உன்னால் முடியாததை ஒருகிளவனிடமிருந்து எதிர்பாக்கிறாயே நீ வாழ்வதற்கே அர்த்தமுண்டா? சீ …சீ …நீ தற்கொலையே செய்வதற்கே தகுதியுடையவன். தலைவன் வருவான். தமிழீழம் பெறுவான். அள்ளிக்கொடுங்கள் என்று பிச்சை எடுத்து மற்றவர்களை ஏமாற்றி வாழும் மனிதப்பதர்களே நீங்கள் வாழ்வதற்கே அர்த்தமற்றவர்கள். நீங்களும் தற்கொலை செய்யவே தகுதி உடையவர்கள். அடிமனதில் மானம் அவமானம் என்ற பண்புகள் சிறிதேனும் இருந்திருந்தால் தற்கொலை செய்திருப்பீர்கள். இன்னும் காலம் தாழ்ந்து போகவில்லை

நான் ஆளமாக நம்பும் ஒரு உண்மையை முன்வைக்கிறேன். எம்சமூகம் தன்னம்பிக்கை அற்றது, போராடும் வல்லமை அற்றது, பெறுமதியற்றது, சித்திரவதைகளைத் தாங்கும் வலு இழந்தது என்பதனால் தானா பிரபாகரன் சயனைட்டை அறிமுகம் செய்து தற்கொலைகளைத் தூண்டினான். இதற்குத்தான் நீங்கள் தகுதி உடையவர்கள் என்பதை அவன் அன்று உணர்ந்திருந்தானோ இல்லையோ உண்மை இதுதான். ஆனால் அவனோ அவன் குடும்பத்தில் எவனோ சயனைட் அடித்து இறக்கவில்லை. இவர்களே மாவீரர்கள்.

எம்சமூகத்தை சரியாகப் புரிந்து உணர்ந்து போராடி தன்னுயிரை வீரனாக ஈகம் செய்த மகா மாவீரன் பிரபாகரன் அவர்களுக்கு என் வீரவணக்கம்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கடுவெல – பட்டியவத்த வீதியில் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது…!!
Next post அமெரிக்காவில் துப்பாக்கி சூடு: 3 பேர் பலி – மர்ம நபர் கைது…!!