விபத்துக்கு பிறகு தன்னைப் பராமரித்துவந்த பெண்ணைக் காண 185 மைல் கடந்து சென்ற நாய்…!!
ரஷ்யாவின் ரோஸ்டோவ் ஓப்லாஸ்ட் பகுதியில் தெருவோரம் வசித்துவந்த ‘ஷாவி’ என்ற நாய் கடந்த குளிர்காலத்தின்போது அந்தச் சாலையை கடந்து சென்ற கார் ஒன்றில் அடிப்பட்டு குளிரில் தவித்தது. இதைக் கவனித்த ஒரு வழிப்போக்கர் ஷாவியை அருகாமையில் இருந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.
இருகால்களின் எலும்புகள் உடைந்த நிலையில் இந்த நாயைப் பார்த்துக்கொள்ள யாரேனும் விருப்பப்படுகின்றீர்களா? என வழிபோக்கர் சமூக தளத்தில் கேட்டபோது நீனா என்பவர் விருப்பம் தெரிவித்தார்.
விபத்துக்குப் பின்னர் கார்கள் மற்றும் சாலையைக் கண்டாலே அதிர்ச்சியடைந்துவந்த ஷாவிக்கு நீனா மீண்டும் நடக்க கற்றுக்கொடுத்தார். ஒவ்வொரு நாளும் அதனுடன் விளையாடுவதை தனது வாடிக்கையாக்கிக் கொண்டார். தனது மகள் மற்றும் சில செல்லப்பிராணிகளுடன் சிறிய வீட்டில் வசித்துவந்த நீனா ஷாவியை வளர்க்க விருப்பம் தெரிவித்த தோழி ஒருவரிடம் அதை ஒப்படைத்தார்.
நீனா வசிக்கும் இடத்திலிருந்து நூற்று எண்பத்தைந்து மைல் தொலைவில் உள்ள அந்தத் தோழியுடன் அனுப்பி வைக்கப்பட்ட ஷாவி சில தினங்களில் அங்கிருந்து காணாமல்போனது. உடனடியாக இந்தத் தகவலை தோழி நீனாவிடம் தெரிவித்தார்.
இந்நிலையில் கடந்த வாரம், நீனா தனது வீட்டுக்கு அருகிலுள்ள கடைக்கு சென்றபோது, ஷாவி அங்கு வந்து சேர்ந்தது. தோழியின் வீட்டிலிருந்து ஒருவார காலமாக 185 மைல் தூரத்தைத் தாண்டி ஓடி தன்னைப் பார்க்க வந்த ஷாவியைக் கண்டு திகைத்துப்போனார்.
இனி ஷாவியைத் தானே வளர்ப்பதாக முடிவு செய்துள்ள நீனா, வாடகைக்கு பெரிய வீட்டைத் தேடும் முயற்சியில் தற்போது இறங்கியுள்ளார்.
Average Rating