குடும்பத்தகராறில் 9 மாத பெண் குழந்தையை முள் புதரில் வீசிய தாய்: போலீசார் விசாரணை…!!
பல்லடம் அருகேயுள்ள வடுகபாளையம் காளியப்பா நகரைச் சேர்ந்தவர் ராஜ்குமார். ஜவுளி வியாபாரம் செய்து வருகிறார். இவரது மனைவி ராமலட்சுமி. இவர்களுக்கு புவனஸ்ரீ என்ற 9 மாத பெண் குழந்தை உள்ளது.
ராஜ்குமார் ஜவுளி வியாபாரத்துக்காக அடிக்கடி வெளியூர் செல்வதால் ராமலட்சுமியின் தாயார் மலையம்மாள் மகளுக்கு துணையாக வந்திருந்தார். இந்த நிலையில் தாய்–மகள் இடையே தகராறு ஏற்பட்டது.
இதில் ஆத்திரமடைந்த ராமலட்சுமி தனது 9 மாத பெண் குழந்தையை வீட்டின் அருகேயுள்ள முள்புதரில் வீசினார். பின்னர் எதுவுமே நடக்காதது போல வீட்டிற்கு வந்து அமைதியாக இருந்து கொண்டார்.
முள்புதரில் குழந்தையின் அழுகுரல் கேட்ட பொதுமக்கள் 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். சிறிது நேரத்தில் ஆம்புலன்ஸ் வந்ததும் குழந்தையை பல்லடம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதற்கிடையே மலையம்மாள் வீட்டில் குழந்தை இல்லாததால் அதிர்ச்சி அடைந்தார். ராமலட்சுமியிடம் குழந்தை எங்கே? என்று கேட்டபோது தான் குழந்தை முள் புதரில் வீசப்பட்டது தெரியவந்தது.
உடனடியாக தாயும், மகளும் பல்லடம் போலீசுக்கு சென்றனர். குழந்தையை முள்புதரில் வீசிய தகவலை கூறினர். ஏற்கனவே முள்புதரில் வீசப்பட்ட குழந்தை ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட தகவல் தெரிந்ததால் போலீசார் ராமலட்சுமியை கடுமையாக கண்டித்தனர்.
பின்னர் திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று குழந்தையை பெற்றுக்கொள்ளுமாறு அறிவுறுத்தி அனுப்பினர்.
Average Rating