சித்தூர்: மகன் இறந்த அதிர்ச்சியில் ஓய்வு பெற்ற சப்–இன்ஸ்பெக்டர் மரணம்…!!
சித்தூர் மதனப்பள்ளி அம்மினேரி தெருவை சேர்ந்தவர் முனிசாமி, ஓய்வு பெற்ற போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர்.
இவருடைய மகன் வெங்கடேஷ் (வயது 42). இவர், மதனப்பள்ளியில் ஜெராக்ஸ் கடை நடத்தி வந்தார். வெங்கடேசுக்கு திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டது. அதனால் கடும் அவதிப்பட்டு வந்தார்.
பெங்களூருவுக்கு சென்று, அங்குள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்ந்து கடந்த சில நாட்களாக சிகிச்சை பெற்று வந்தார். அங்கு, சிகிச்சை பலனின்றி வெங்கடேஷ் நேற்று முன்தினம் இரவு சுமார் 10 மணியளவில் பரிதாபமாக இறந்தார்.
வெங்கடேஷ் இறந்துபோன தகவலை அவருடைய உறவினர்கள், முனிசாமிக்கு செல்போன் மூலம் தெரிவித்தனர். தகவலை கேள்விப்பட்ட அவர், அதிர்ச்சி அடைந்தார். அதைத்தொடர்ந்து வெங்கடேஷின் உடலை ஆம்புலன்ஸ் மூலமாக பெங்களுருவில் இருந்து நேற்று அதிகாலை 3 மணியளவில் சொந்த ஊருக்கு கொண்டு வந்து உறவினர்களின் அஞ்சலிக்காக வீட்டில் வைத்தனர்.
வெங்கடேஷின் உடலை பார்த்ததும், அவருடைய தந்தை முனிசாமி மற்றும் குடும்பத்தினர் கதறி அழுதனர். அவ்வாறு தொடர்ந்து அழுது கொண்டிருந்தபோது முனிசாமிக்கு அதிர்ச்சியில் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு, நாற்காலியில் அமர்ந்தபடியே மரணம் அடைந்தார். மகன் இறந்த அதிர்ச்சியில் மாரடைப்பு ஏற்பட்டு தந்தை இறந்த சம்பவம், மதனப்பள்ளி பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. தந்தை, மகன் உடல்கள் ஒரே இடத்தில் அடக்கம் செய்யப்பட்டது.
Average Rating