பெண் கறுப்பாக இருப்பதாக புகார்; கூடுதல் வரதட்சணை கேட்டு திருமணத்தை நிறுத்திய மணமகன் குடும்பம்..!!
செய்யாறை அடுத்த திருப்பனமூர் கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேசன். இவரது மகன் தமிழ்மணி (29). சிப்காட்டில் உள்ள தனியார் கம்பெனியில் மேலாளராக உள்ளார்.
இவருக்கும் பக்கத்து கிராமத்தை சேர்ந்த ஊராட்சி தலைவரின் மகளான 20 வயது இளம் பெண்ணுக்கும் திருமணம் செய்ய இரு வீட்டாரின் பெற்றோர்களும் முடிவு செய்தனர். நிச்சயதார்த்தம் கடந்த மாதம் 14–ந்தேதி நடந்தது.
அப்போது நவம்பர் 22–ந் தேதி திருமணம் செய்வது என முடிவு செய்யப்பட்டது. மேலும் திருமணத்தின் போது பெண் வீட்டார் சார்பில் 30 சவரன் நகை, கார், தருவதாக கூறியுள்ளனர். இதற்கு மாப்பிள்ளை வீட்டார் சம்மதம் தெரிவித்தனர்.
பெண் வீட்டார் திருமண வேலைகளில் ஈடுபட்டதோடு பத்திரிகை அடித்து உறவினர்கள், நண்பர்களுக்கும் கொடுத்து வந்தனர். ஆனால் மாப்பிள்ளை வீட்டார் திருமணத்திற்கான எந்த ஏற்பாடும் செய்யவில்லை என பெண் வீட்டாருக்கு தகவல் கிடைத்தது.
இதனால் சந்தேகம் அடைந்த அவர்கள் கடந்த 19–ம் தேதி மாப்பிள்ளை தமிழ்மணி வீட்டுக்கு சென்று விசாரித்துள்ளனர். அப்போது மணப்பெண் கறுப்பாக உள்ளார். எனவே கூடுதலாக 20 சவரன் நகை, ரூ.5 லட்சம் ரொக்கம் தந்தால் தான் திருமணம் முடியும் என மாப்பிள்ளையின் தந்தை வெங்கடேசன் கூறியதாக தெரிகிறது.
இதற்கு மாப்பிள்ளை தமிழ்மணி, தாய் காந்தா, உறவினாகள் தேவி, விஜயகுமார், விவேகானந்தன் ஆகியோர் உடந்தையாக இருந்துள்ளனர். மேலும் இது குறித்து வெளியே சொன்னால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டியுள்ளனர்.
இது குறித்து செய்யாறு அனைத்து மகளிர் போலீசில் பெண் வீட்டார் புகார் செய்தனர். இன்ஸ்பெக்டர் கலையரசி வழக்குப்பதிவு செய்து மாப்பிள்ளையின் உறவினர் விஜயகுமாரை கைது செய்தார்.
தலைமறைவாகி விட்ட மாப்பிள்ளை, அவரது தாய், தந்தை மற்றும் உறவினர்களை தேடிவருகின்றனர்.
Average Rating