பூமியை காக்க கைகோர்க்கும் உலக பணக்காரர்கள்…!!
அதிக அளவிளான படிம எரிபொருட்களை (நிலக்கரி, கச்சா எண்ணெய்) பயன்படுத்துவதால் வளிமண்டலத்தில் கார்பன் டை ஆக்சைடு அதிகரித்து அதனால் பூமியின் வெப்பநிலை உயர்கிறது. பூமியின் வெப்பநிலை உயர்வதால் பனிமலைகள் உருகி கடல் மட்டம் அதிகரிக்கிறது. இதனால் தீவு நாடுகள் கடல் நீரில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும் பூமியின் பருவநிலையிலும் மாற்றம் ஏற்படுவதால் வறட்சி, வெள்ளம் போன்ற இயற்கை சீற்றங்கள் ஏற்பட்டு லட்சக்கணக்கான மக்கள் உயிரிழக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இதனை தடுப்பது பற்றி பிரான்ஸ் தலைநகர் பாரிசில் பருவகால மாற்றம் தொடர்பான விழிப்புணர்வு மாநாடு நடக்கிறது. உலக அளவில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் விழிப்புணர்வு மற்றும் நாடுகள் இடையிலான உறவு ஆகியன குறித்து விவாதிக்கப்படுகிறது. இந்த மாநாட்டில் அமெரிக்க அதிபர் ஒபாமா, இந்திய பிரதமர் மோடி உள்பட 140-க்கும் மேற்பட்ட தலைவர்கள் பங்கேற்கின்றனர். டிசம்பர் 11-ம் தேதி வரை நடக்கும் இந்த மாநாட்டில் இந்திய பிரதமர் மோடி பங்கேற்று உரையாற்றுகிறார்.
இந்த மாநாட்டின் ஒரு பகுதியாக ரத்தன் டாடா, முகேஷ் அம்பானி, பில் கேட்ஸ் உட்பட 29 உலக தொழில் அதிபர்கள் ஒன்றிணைந்து சுத்தமான எரிபொருட்களை தரும் தொழில்நுட்ப உருவாக்கத்தில் முதலீடு செய்ய முன்வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதற்காக எரிசக்திக்கான திருப்புமுனை கூட்டணியை ஏற்படுத்தியுள்ளனர். ஆனால் எவ்வளவு முதலீடு செய்யப்படும் என்பது தெரியவில்லை. இதற்கான முறையான அறிவிப்பு பாரிஸ் மாநாட்டில் வெளியிடப்படவுள்ளது.
Average Rating