வந்தவாசி வாலிபர் மலேசியாவில் மர்ம சாவு: குடும்பத்தினர் புகார்…!!
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி டவுன் கோட்டை கோவில் தெருவை சேர்ந்தவர் கவுஸ். இவரது மனைவி தியாரி. இவர்களது மகன்கள் அயாட்பாஷா (வயது 29), சாதிக்பாஷா (26), சபீர் (24). அயாட்பாஷா குவைத்தில் வேலை செய்து வருகிறார்.
சாதிக் பாஷா மலேசியாவில் ஜோகர் பாத் என்ற இடத்தில் உள்ள பள்ளி கேன்டீனில் வேலை செய்து வந்தார்.
இந்த நிலையில் சாதிக்பாஷாவின் வீட்டுக்கு நேற்று மதியம் மலோசியாவில் இருந்து ஒரு போன் அழைப்பு வந்தது. அவர் வேலை செய்த கேன்டீன் நிர்வாகிகள் பேசினர். அவர்கள் சாதிக் பாஷா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரிவித்து விட்டு அழைப்பை துண்டித்தனர். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் கதறி அழுதனர்.
இதுகுறித்து சாதிக்பாஷாவின் குடும்பத்தினர் போன் மூலம் மலேசியாவில் உள்ள கேன்டீன் நிர்வாகத்தினரை மீண்டும் தொடர்பு கொண்டனர். ஆனால் அவர்கள் சாதிக் பாஷா இறந்ததை உறுதி செய்தனரே தவிர அவரது இறப்புக்கான காரணம் என்ன? என்பதை தெரிவிக்கவில்லை.
இதுகுறித்து உயிரிழந்த சாதிக்பாஷாவின் தம்பி சபீர் மற்றும் குடும்பத்தினர் கூறியதாவது:–
சாதிக்பாஷா, மலேசியாவில் உள்ள அந்த கேன்டீனில் கடந்த ஏப்ரல் மாதம் வேலைக்கு சேர்ந்தார். 2 மாதத்துக்கு ஒருமுறை ரூ.15 ஆயிரத்தை சம்பளம் என வீட்டுக்கு அனுப்பி வைப்பார்.
சாதிக் பாஷா வீட்டுக்கு எப்போது போன் செய்தாலும், கேன்டீனில் என்னை அதிகளவு வேலை வாங்குகின்றனர். கேன்டீனில் வேலை செய்வதோடு, உரிமையாளரின் வீட்டிலும் வற்புறுத்தி வேலை வாங்குகின்றனர்.
சம்பளம் கேட்டாலும் தகராறு செய்வதாக கூறினார். இதனால் சாதிக் பாஷாவின் சாவில் சந்தேகம் உள்ளது. இதுகுறித்து தமிழக அரசு, இந்திய அரசிடம் வலியுறுத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
Average Rating