மீன்சுருட்டி அருகே சாலையோர பள்ளத்தில் பாய்ந்த அரசு விரைவு பஸ்–3 பேர் காயம்…!!
சென்னையில் இருந்து கும்பகோணத்துக்கு நேற்றிரவு அரசு விரைவு பஸ் புறப்பட்டது. பஸ்சை டிரைவர் தேனி மாவட்டம் மேல்மங்கலத்தை சேர்ந்த பாலகிருஷ்ணன் (வயது54) ஓட்டினார். நடத்துனராக கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்குடி உடையார்குடியை சேர்ந்த அருள்முருகன் (39) இருந்தார். பஸ்சில் 20க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர்.
இன்று அதிகாலை அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே உள்ள வாழைக்குட்டை நான்கு வழிச்சாலையில் பஸ் வந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ், தாறுமாறாக ஓடி சாலையோர பள்ளத்துக்குள் பாய்ந்தது. பஸ் கவிழாமல் இருப்பதற்காக டிரைவர் பாலகிருஷ்ணன் சாதுர்யமாக செயல்பட்டு பஸ் நிறுத்தினார். பின்னர் பஸ்சில் இருந்த பயணிகள் அனைவரும் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டனர்.
பயணிகள் இறங்கிய பிறகு டிரைவர், பஸ்சை பின்னால் நகர்த்தி சாலையில் நிறுத்த முயன்றார். அப்போது நிலைதடுமாறி சாலையின் நடுவே பஸ் கவிழ்ந்தது. இதனால் அந்த வழியாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் இந்த விபத்தில் பஸ் பயணிகள் சென்னை ஆண்டாள்குப்பத்தை சேர்ந்த மகாலிங்கம் (வயது 53), கும்பகோணம் சுவேதாநகரை சேர்ந்த விஜயன் (36), திருத்தணி அருகே உள்ள புதுவண்டிபேட்டை எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்த முருகன் (38) ஆகியோர் காயமடைந்தனர்.
விபத்து குறித்த தகவல் அறிந்ததும் மீன்சுருட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் காயமடைந்த 3பேரையும் மீட்டு மீன்சுருட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்குஅனுப்பி வைத்தனர். பலத்த காயமடைந்த முருகன் மேல்சிகிச்சைக்காக அங்கிருந்து ஜெயங்கொண்டம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். சாலையின் நடுவே கவிழ்ந்த பஸ், ராட்சத எந்திரம் மூலம் நிலை நிறுத்தப்பட்டது. அதன்பிறகு அந்த வழியாக போக்குவரத்து சீரானது
Average Rating