மோடி அரசு என்னுடன் நேருக்குநேர் மோதட்டும்: வருமான வரித்துறை சோதனை பற்றி ப.சிதம்பரம் கருத்து…!!
சென்னையில் உள்ள கார்த்தி சிதம்பரத்தின் வீடு உள்ளிட்ட சில இடங்களில் இன்று வருமான வரித்துறையினர் நடத்திய அதிரடி சோதனை தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான ப. சிதம்பரம், மத்திய அரசுக்கு விருப்பம் இருந்தால் என்னுடன் நேருக்குநேர் மோதட்டும் என்று கூறியுள்ளார்.
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள கார்த்தி சிதம்பரம் வீடு, அவரது அலுவலகம் உள்ளிட்ட சில இடங்களில் வருமான வரித்துறை மற்றும் பொருளாதார அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று ஒரே நேரத்தில் சோதனை மேற்கொண்டனர். இந்நிலையில், இதுதொடர்பாக இன்று பிற்பகல் டெல்லியில் பேட்டியளித்த ப.சிதம்பரம் கூறியதாவது:-
இன்று நான் பயணத்தில் இருந்தபோது சென்னையில் சில இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருவதாக தகவல் வந்தது. அந்த நிறுவனங்களுக்கும் எனது குடும்பத்தாருக்கும் எவ்வித பொருளாதார தொடர்பும் இல்லை என நாங்கள் அடுத்தடுத்து கூறிவந்துள்ளோம்.
உள்நோக்கத்துடன் இந்த அரசால் எடுக்கப்படும் நடவடிக்கைகள எதிர்கொள்ள நானும் எனது குடும்பத்தாரும் தயாராகவே இருக்கிறோம். இந்த அரசு என்னை குறிவைக்க விரும்பினால், நேரடியாக மோதலாம். மாறாக, சொந்தமாக தொழில் செய்துவரும் அரசியலில் தொடர்பே இல்லாத எனது மகனின் நண்பர்களை வேதனைப்படுத்த கூடாது.
மத்திய அமலாக்கத்துறை இயக்குனரகத்தைச் சேர்ந்த ஒருஅதிகாரியின் உத்தரவின் பேரில் எனது மகனின் நண்பர்களுக்கு சொந்தமான நிறுவனங்களில் இதுபோன்ற சோதனைகள் நடத்தப்படுகின்றன. மத்திய நிதி மந்திரியாக நான் பொறுப்பேற்றதற்கு முந்தைய காலத்தில் அந்த அதிகாரியின் மீது முன்னர் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அந்த நடவடிக்கையை ரத்துசெய்து உத்தரவிட வேண்டும் என நான் நிதி மந்திரியாக இருந்தபோது அந்த அதிகாரி என்னை அணுகினார்.
எனக்கு முன்னர் பிறப்பிக்கப்பட்ட உத்தரவை நான் ரத்து செய்ய இயலாது என கூறி மறுத்து விட்டேன். தற்போது, மத்தியில் ஆட்சி மாறிய பின்னர், தனது அதிகாரத்தை பயன்படுத்தி எனது மகனின் நண்பர்களை கொடுமைப்படுத்தும் வாய்ப்பு அந்த அதிகாரிக்கு கிடைத்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
Average Rating