கும்மிடிப்பூண்டி அருகே மின்சாரம் தாக்கி 11–ம் வகுப்பு மாணவன் பலி..!!
கும்மிடிப்பூண்டியை அடுத்த பெத்திக்குப்பம் கிராமம் ரெட்டியார் தெருவைச் சேர்ந்தவர் ரவி. இவரது மகன் பாலாஜி (16). இவர் பெரிய ஓபுளாபுரம் கிராமத்தில் உள்ள பாட்டி வீட்டில் தங்கி தனியார் பள்ளியில் 11–ம் வகுப்பு படித்து வந்தார்.
நேற்று பள்ளி விடுமுறை என்பதால் பாலாஜி பெத்திக்குப்பம் கிராமத்திற்கு வந்தார். அவர் அதே பகுதியை சேர்ந்த நண்பர்கள் அண்ணன்– தம்பிகளான குருபிரகாஷ்பதி, கோசலைராமன் ஆகியோருடன் சைக்கிள் ஓட்டினார்.
கோசலைராமன் ஒரு சைக்கிளிலும், பாலாஜி ஒரு சைக்கிளை ஓட்ட பின்புறம் குருபிரகாஷ்பதி அமர்ந்து சென்றார்.
பெத்திக்குப்பம், ரேசன் கடை எதிரே நூலக கட்டிடத்திற்கான கட்டுமான வேலை நடந்து வருகிறது. கட்டுமான வேலைகளுக்காக அருகே உள்ள மின்கம்பத்தில் இருந்து மின்வயர்கள் தாழ்வாக தரையையொட்டி கொண்டு செல்லப்பட்டிருந்தது.
அப்பகுதியில் பாலாஜி சைக்கிள் ஓட்டிச் செல்லும் போது மின்வயர் சைக்கிளில் சிக்கியது. இதில் தடுமாறி சைக்கிளுடன் பாலாஜியும் குருபிரகாஷ்பதியும் கீழே விழுந்தனர்.
மின்வயர் அறுபட்டு சைக்கிளுடன் சிக்கியதில் மின்சாரம் பாய்ந்து பாலாஜி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
மேலும் மின்சாரம் தாக்கியதில் குருபிரகாஷ் பதியும், கோசலைராமனும் காயம் அடைந்தனர். அவர்களுக்கு சென்னை அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இதுகுறித்து கும்மிடிப்பூண்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Average Rating