விமானப்படையினரின் தாக்குதலில புலிகளின் செய்மதி தொலைத்தொடர்பு கோபுரம் தகர்ப்பு
விமானப்படையின் விமானங்கள் நேற்றுக்காலை கிளிநொச்சியில் மேற்கொண்ட தாக்குதலில் புலிகளின் சர்வதேச செய்மதி தொலைத்தொடர்பு மற்றும் ஒருங்கிணைப்பு நிலையம் நிர்மூலமாக்கப்பட்டதாக விமானப்படைப் பேச்சாளர் குறுப்கெப்டன் அஜந்த டி சில்வா தெரிவித்துள்ளார். நேற்றுக்காலை 7.20அளவில் விமானப் படைக்குச் சொந்தமான ஜெட்ரக போர்விமானங்கள் இந்தத் தாக்குதல்களை நடத்தியுள்ளன. கிளிநொச்சியின் வட கிழக்கிலுள்ள தர்மபுரம் பிரதேசத்தில் அமைந்துள்ள புலிகளின் சர்வதேச செய்மதி தொலைத்தொடர்பு ஒருங்கிணைப்பு நிலையம் புலிகளின் முக்கிய தலைவர்கள் ஒன்றுகூடும் இடமாக செயற்படுவதை விமானப் படையினர் புலனாய்வுத் தகவல்கள் உறுதி செய்துள்ளன. இதனையடுத்தே இந்த வான் தாக்குதல்களை வான்படையினர் வெற்றிகரமாக மேற்கொண்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். இதேவேளை புலிகள் தரப்புச் செய்திகளின்படி மேற்படித் தாக்குதலில் நான்கு பொதுமக்கள் கொல்லப்பட்டு ஐவர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.