கரூர் அருகே கழிப்பறை தொட்டிக்குள் விழுந்து 2 தொழிலாளர்கள் பலி…!!
கரூர் அருகே இன்று கழிப்பறை தொட்டிக்குள் விழுந்து 2 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கரூர் அருகே உள்ள வெண்ணைமலை சண்முகா நகர் பகுதியில் கொசுவலை தயாரிக்கும் கம்பெனி உள்ளது. இங்குள்ள கழிப்பறை தொட்டியை சுத்தம் செய்யும் பணி இன்று நடைபெற்றது. இப்பணியில் கரூர் கே.எம்.சி.காலனியை சேர்ந்த பாலகிருஷ்ணன் (வயது 35), பாலம்மாள்புரத்தை சேர்ந்த சங்கர் (37) மற்றும் ஒருவர் ஆகியோர் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது தொட்டியின் மேல் நின்றிருந்த பாலகிருஷ்ணன் திடீரென தவறி தொட்டிக்குள் விழுந்தார். இதையடுத்து அவரை சங்கர் காப்பாற்ற முயன்ற போது அவரும் தொட்டிக்குள் விழுந்தார். இதில் 2 பேரும் கழிவுநீரில் மூழ்கி மூச்சுத்திணறி பலியாகினர்.
இது குறித்த தகவல் அறிந்ததும் வெங்கமேடு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் 2 பேர் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். கழிப்பறை தொட்டிக்குள் விழுந்து 2 பேர் பலியான சம்பவம் அப்பகுதி பொது மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Average Rating