பாகிஸ்தான் பொதுத் தேர்தலை புறக்கணிக்கும் முடிவினை பெனாசிர் வாபஸ் பெற்றார்…!
பாகிஸ்தானில் எதிர்வரும் ஜனவரி மாதம் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவை தாக்கல் செய்யுமாறு பெனாசிர் தனது கட்சியினருக்கு தெரிவித்துள்ளார். பொதுத் தேர்தலைப் புறக்கணிக்குமாறு கூறிவந்த பெனாசிர் அம்முடிவினை வாபஸ்பெற்று தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார். பாகிஸ்தானில் நெருக்கடி நிலை அமுலில் உள்ளதுடன் இதற்கு உயர் நீதிமன்றமும் அனுமதி அளித்துள்ளது. இந்நிலையில் தேர்தல் நடைபெறும் வரை அவசரகால நிலை நீடிக்குமென ஜனாதிபதி முஷாரப் அறிவித்துள்ளார். தேர்தலில் போட்டியிடும் எண்ணத்துடன் தனது அஞ்ஞாத வாசத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்பிய பெனாசிர் திடீரென தேர்தலைப் புறக்கணிக்கும் எண்ணத்தில் இருந்ததுடன் அதற்காக ஏனைய கட்சிகளின் ஆதரவையும் திரட்டினார். ஆனால், மற்ற எதிர்க்கட்சிகள் தேர்தலைப் புறக்கணிப்பதற்கு உடன்படவில்லை. அத்துடன் சவூதியிலுள்ள முன்னாள் பிரதமர் நவாஷ் ஷெரீப்பும் பாகிஸ்தானுக்கு திரும்பிவந்து தேர்தலில் போட்டியிட திட்டமிட்டுள்ளார். இதனாலும் பெனாசிரின் முயற்சி தோல்வியடைந்தது. இது குறித்து பெனாசிர் தெரிவிக்கையில் நாங்கள் தேர்தலைப் புறக்கணிக்கமாட்டோம். ஏனெனில், மற்றைய எதிர்க்கட்சிகள் போட்டியின்றி வெற்றிபெற நாம் ஒருபோதும் அனுமதிக்கப்போவதில்லை. அதனாலேயே நாமும் தேர்தலில் போட்டியிடுகின்றோம். மேலும், எமது கட்சியின் வேட்பாளர்களை வேட்புமனுத் தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டுள்ளதுடன் தீவிர பிரசார நடவடிக்கைகளிலும் ஈடுபடுமாறும் கூறியுள்ளேன்.
இதனையடுத்து தேர்தல் புறக்கணிப்புக்கு உடன்படாத ஏனைய எதிர்க்கட்சிகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்த பின்னர் எமது வேட்பாளர்கள் வேட்பு மனுத் தாக்கல் செய்வார்கள்.
மேலும், இந்தத் தேர்தலில் பாகிஸ்தான் அரசு மோசடிகள் செய்வதற்குத் திட்டமிட்டிருப்பதாக எமக்குத் தகவல் கிடைத்துள்ளது. எனவே, இது தொடர்பாக நான் பாகிஸ்தான் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு கடிதம் ஒன்று எழுதப்போகின்றேன்.
தேர்தலுக்காக அச்சடிக்கப்பட்ட வாக்குச் சீட்டுகளின் எண்ணிக்கையை எமக்குத் தேர்தல் ஆணையகம் தெரிவிக்கவேண்டும்.
இதேவேளை, பலுசிஸ்தான் மாகாணத்தில் இராணுவம் எடுத்த நடவடிக்கை தேவையற்றது அதனை உடனடியாக நிறுத்தி அங்கிருந்து இராணுவத்தை வாபஸ் பெறவேண்டுமென பெனாசிர் தெரிவித்தார்.