குழந்தைகளின் விபரங்களை இணையத்தில் வெளியிடுவதற்கு தாய்லாந்தில் தடை
தாய்லாந்தில் குழந்தைகளுக்கெதிரான வன்முறைகள் அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து குழந்தைகள் தொடர்பான விபரங்களை இணையத்தளத்தில் வெளியிடுவதற்கு அந்நாட்டில் தடை விதிக்கப்பட்டுள்ளது. இணையத்தளம் மூலம் பெறப்படும் தகவல்களின் அடிப்படையிலேயே சிறார்களுக்கு எதிரான குற்ற நடவடிக்கைகள் அதிகளவு நடைபெறுகின்றதென குழந்தைகள் பாதுகாப்புக்கான தாய்லாந்தின் தேசியக்குழு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அக்குழுவின் தலைவரும் சமூக வளர்ச்சித்துறை அமைச்சருமான பாய்பூன் தெரிவிக்கையில்; 18 வயதுக்குட்பட்ட சிறார்கள் தொடர்பான விபரங்களை இணையத்தளத்தில் வெளியிட தடைவிதிப்பதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. இணையத்தில் கிடைக்கும் விபரங்களின் அடிப்படையிலேயே குழந்தைகள் கடத்தப்படுதல், பாலியல் வல்லுறவுகள், திருட்டு மற்றும் கொலை போன்ற சம்பவங்கள் இடம்பெறுகின்றன. இணைய சேவைவசதிகளை வழங்குவோர் குழந்தைகளின் படங்கள், தொலைபேசி எண்கள் மற்றும் இணைய முகவரி போன்றவற்றை இணையத்தளத்தில் வெளியிட்டால் சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும். குழந்தைகள் எந்தவிதமான இணையத்தளங்களை அதிகளவில் பயன்படுத்துகிறார்கள் என்பதைக் கண்காணிக்குமாறு பெற்றோர்கள் மற்றும் பாடசாலை ஆசிரியர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ள”தெனத் தெரிவித்தார்.