அமெரிக்காவின் அழுத்தத்தையும் மீறி ஜனாதிபதி மகிந்த ஈரான் பயணம்
அமெரிக்கா உட்பட சர்வதேச சமூகத்தின் எதிர்ப்பையும் மீறி ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ திங்கட்கிழமை ஈரானுக்கான சர்ச்சைக்குரிய பயணத்தை மேற்கொள்கிறார். உகண்டாவின் தலைநகர் கம்பாலாவில் நடைபெற்ற பொதுநலவாய நாடுகளின் உச்சி மாநாட்டில் கலந்து கொண்ட ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ ஞாயிற்றுக்கிழமை அங்கிருந்து ஈரானுக்கு விஜயம் செய்துள்ளார். நான்கு நாள் விஜயம் மேற்கொள்ளும் ஜனாதிபதி ஈரான் ஜனாதிபதி அகமட் நிஜாட்டை சந்தித்துப் பேசுவார். அத்துடன் ஈரானின் மதத்தலைவர் அயத்துல்லா அலி கொமேனியையும் ஜனாதிபதி சந்தித்துப் பேசுவார். ஈரானிடம் இருந்து 1400 கோடி ரூபாவுக்கு முப்படையினர் மற்றும் பொலிஸாருக்கு ஆயுதங்களை கொள்வனவு செய்யும் ஒப்பந்தத்திலும் ஜனாதிபதி கைச்சாத்திடுவார் எனத் தெரிவிக்கப்படுகிறது. ஈரானின் அணுத்திட்டத்துக்கு எதிராக வல்லரசு நாடுகள் உட்பட சர்வதேச சமூகம் பொருளாதாரத் தடைகளை விதித்து ஈரானை தனிமைப்படுத்திவரும் தற்போதைய சூழ்நிலையில் இலங்கை ஜனாதிபதி அங்கு சென்று ஆயுதக் கொள்வனவில் ஈடுபட்டால் அந்த நடவடிக்கையானது இலங்கைக்கு பெரும் நெருக்கடிகளை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜனாதிபதியின் இந்த விஜயம், மற்றும் ஆயுதக் கொள்வனவு தொடர்பாக இலங்கைக்கான ஈரானிய தூதுவர் ஏற்கனவே அங்கு சென்று ஏற்பாடுகளைச் செய்துள்ளார். 2005 ஆம் ஆண்டு அன்றைய ஜனாதிபதி சந்திரிகா பண்டார நாயக்க குமாரதுங்கவும் ஈரானுக்கு விஜயம் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது. ஈரானிடம் இருந்து இலங்கை பெருமளவு மசகு எண்ணெயை கொள்வனவு செய்து வருகிறது.