லண்டன் ரயிலில் பயணித்த பெண்ணுக்கு “பருமனானவர்களை வெறுக்கும் நபர்களின்” அட்டை; பிரித்தானிய பொலிஸாரின் விசாரணை ஆரம்பம்…!!
லண்டனில் ரயில் ஒன்றில் பயணம் செய்த பெண்ணுக்கு ஒரு குழுவினர் “கொழுத்த, அசிங்கமான மனிதர்” என எழுதப்பட்ட அட்டையொன்றை வழங்கியமை தொடர்பாக பிரித்தானிய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
காரா புளோரிஷ் எனும் பெண், லண்டனின் சுரங்க ரயிலொன்றில் பயணம் செய்தபோது ஒரு குழுவினர் அவருக்கு மேற்படி அட்டையை கொடுத்திருந்தனர்.
இக்குழுவினர் தம்மை ஓவர்வெய்ட் ஹேட்டர்ஸ் லிமிடெட் என அழைத்துக்கொள்கின்றனர்.
அந்த அட்டையில் ஒரு பகுதியில் “ஃபெட் (கொழுத்தவர்) என எழுதப்பட்டிருந்தது.
“எமது அமைப்பு கொழுத்த மனிதர்களை வெறுக்கிறது. அரைவாசி உலகம் பட்டினியால் கிடக்கும்போது நீங்கள் அதிகமான உணவை உட்கொள்வதை நாம் ஆட்சேபிக்கிறோம்” என அந்த அட்டையின் மறுபுறத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.
சுகாதாரத்துறை ஊழியரான காரா புளோரிஷ் இந்த அட்டையை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டிருந்தார்.
பிரித்தானியர்களின் சராசரி எடையுடன் ஒப்பிடும்போது காரா புளோரிஷ் அதிக எடை கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தமது தன்னம்பிக்கை தொடர்பில் தடுமாறும் மக்களுக்கு இந்த அட்டை பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது என அவர் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், இந்த குழுவினர் தொடர்பில் பிரித்தானிய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Average Rating